பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 65). இவர் எஸ்.பி.கே. நிறுவனம் மூலம் நெடுஞ்சாலைத்துறை பணிகளை செய்து வருகிறார்.

இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 50 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனையை தொடங்கினர்.


செய்யாத்துரையின் அலுவலகம் மட்டுமின்றி அவரது மகன்கள் கருப்பசாமி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் ஊழியர்களது வீடுகள், சார்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு ஆய்வு நடத்தினர்.இந்த சோதனையின்போது வீடுகள் மற்றும் கார்களில் பதுக்கப்பட்ட ரூ. 174 கோடி ரொக்கம், 106 கிலோ தங்க கட்டிகள் ஆகியவை சிக்கின. மேலும் பல நூறு கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மதுரை கே.கே.நகரில் உள்ள செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நட்சத்திர விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. செய்யாத்துரையின் மகன் ஈஸ்வரனின் வீட்டில் நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.

செய்யாத்துரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார்கோட்டையில் அவரது பூர்வீக வீடு மற்றும் தோட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள வீட்டு சுவர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 இடங்களில் சுவர்களை இடித்து இந்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியுள்ள தங்க கட்டிகள், பணக்குவியல்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் அருப்புக்கோட்டையில் 3-வது நாளாக இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையும் நீடித்து வருகிறது.

காண்டிராக்டர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் கணக்கில் காட்டப்படாத தங்கம்-ரொக்கம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

செய்யாத்துரை 100-க்கும் மேற்பட்ட பினாமிகள் மூலம் பல கோடி பணத்தை முக்கிய புள்ளிகளுக்கு கைமாற்றியதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகள், முக்கிய நபர்கள் குறித்தும் செய்யாத்துரையிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் நிலைகுலைந்த செய்யாத்துரை விசாரணையின் போது முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், கேள்விகளுக்கு உரிய பதிலை தருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மதுரை ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் செய்யாத்துரையிடம், வருமான வரித்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களின் 15-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

வங்கிகள் மூலம் நடைபெற்றுள்ள பண பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து வருமான வரித்துறையினர் பெற்றுள்ளனர்.

மதுரை நட்சத்திர விடுதியில் தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் அடிக்கடி வந்து சென்ற விவரம் குறித்தும் வருமான வரித்துறையினர், செய்யாத்துரையிடம் துருவித்துருவி கேள்விகளை கேட்டனர்.

செய்யாத்துரையுடன் தொடர்புடைய அரசு உயர் அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையின் அடிப்படையில் அரசியல் பிரமுகர்கள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நடவடிக்கை அரசியல் புள்ளிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.