சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா?

‘வம்சம்’ தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா. டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், என் இனிய தோழியே, சபீதா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் வெங்கடேஸ்வரா பெருமாள் நகர் சிவன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வந்தார்.


பிரியங்காவின் வீட்டில் வேலை செய்யும் தீபா என்ற பெண் இன்று காலை 6.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது பிரியங்கா படுக்கை அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தகிரி, நரசிம்மமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிரியங்காவின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரியங்காவுக்கும், கூடைப்பந்து பயிற்சியாளரான அருண்பாலா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இதன் காரணமாகவும், குழந்தை இல்லாத ஏக்கத்திலும் பிரியங்கா மனம் உடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் அருண்பாலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அருண்பாலாவும், பிரியங்காவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அருண்பாலா கூடைப்பந்து பயிற்சியாளர் என்பதால் பள்ளிகளில் அது தொடர்பான விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

அப்போது அவருக்கு பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி தான் பிரியங்காவுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு அருண்பாலா வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

பிரியங்கா நடிகையான பின்னர் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே இருவரும் பிரிந்துள்ளனர். முறைப்படி விவாகரத்து பெறுவதற்காக வக்கீல்களுடன் ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.

பிரியங்காவை பிரிந்த பின்னர் அருண்பாலா வளசரவாக்கம் வீட்டுக்கு வருவதில்லை. நண்பர் ஒருவருடன் தங்கி உள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி உள்ளது. இதுவே பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரியங்கா ஏற்கனவே ஒருமுறை பிளேடால் கைகளில் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கும் பிரியங்கா கோபப்பட்டு வந்துள்ளார். கடுமையான மனஅழுத்தத்தாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுபோன்று காரணங்களாலேயே பிரியங்கா உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.