தேர்தல் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் - காரிய கமிட்டி ஒப்புதல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசித்து தீர்மானிக்கும் செயற்குழுபோல் இயங்கும் மத்திய காரிய கமிட்டிக்கு  தேசிய அளவில் மூத்த தலைவர்களும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவது வழக்கம்.

காங்கிரஸ்  கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர், மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கலைத்து விட்டார். அதற்கு மாற்றாக 34 உறுப்பினர்களை கொண்ட புதிய நெறிமுறை குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில், 51 உறுப்பினர்களுடன் புதிதாக மத்திய காரிய கமிட்டியை ராகுல் காந்தி சமீபத்தில் அமைத்தார்.

இந்த காரிய கமிட்டியில் உறுப்பினர்களாக 23 பேர், நிரந்தர அழைப்பாளர்களாக 19 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக 9 பேர் என மொத்தம் 51 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், ஆலோசிக்கவும் காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டியின் முதல்  கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், காரிய கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கிடையில் உரையாற்றிய சோனியா காந்தி, இந்தியாவின் ஜனநாயகத்தை சீரழிக்கும் ஆபத்தான ஆட்சியில் இருந்து மக்கள் மீட்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, ‘நமது கட்சியின் வாக்குவங்கியை அதிகப்படுத்தும் பணி இன்று நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய காரியமாகும்’ என குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தொகுதியிலும் நமக்கு வாக்களிக்க தவறிய மக்களை தேடிப்பிடித்து, சந்தித்து அவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் நாம் உழைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.முன்னர் எப்போதும் இல்லாத மிகப்பெரிய பலப்பரீட்சையில் நான் குதித்திருக்கிறேன். கட்சி என்னும் அமைப்பில் கருத்துகளை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் தவறான தகவலை வெளிப்படுத்தி எனது பலப்பரீட்சையை பலவீனமாக்க முயற்சித்தால், அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க நான் தயங்கவே மாட்டேன் எனவும் கட்சியினரை ராகுல் காந்தி எச்சரித்தார்.

அதன் பின்னர், எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளித்து மேலிட தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அனைத்திந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் கேலாட், தேர்தல் பிரசார குழு அமைப்பது, எதிர்வரும் தேர்தல்களிலும், தேர்தலுக்கு பின்னரும் கூட்டணி அமைப்பது ஆகிய அதிகாரங்கள் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.