பிரதமர் மீது உரிமை மீறல் தீர்மானம்!

ரஃபேல் பேர விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தவறான தகவல்களை கூறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், இருவரின் மீதும் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததைக் கண்டித்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது கடந்த 20ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரான்ஸுடன் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். பிரான்ஸ் பிரதமருடன் நான் பேசியபோது அப்படி எந்த ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்று கூறினார். ஒரு தொழிலதிபருக்கே ரஃபேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தத் தொழிலதிபர் ரூ. 45 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார். தன் வாழ்நாளில் ஒரு விமானத்தைக்கூட அந்தத் தொழிலதிபர் உருவாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ”என்று கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டதே காங்கிரஸ் அரசுதான்” என்று கூறினார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் ஷர்மா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இன்று (ஜூலை 23) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஏ.கே.அந்தோணி கூறுகையில், “ரஃபேல் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விலையை வெளிப்படையாக அறிவிப்பதற்கு தடையாக ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், "பிரதமர் மீதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
"இது மக்களவையில் நடந்தது என்பதால், மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறோம்” என்று ஆனந்த் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஃபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மக்களவையில் பொய் கூறியுள்ளனர். இதன் மூலம் நாட்டு மக்களை அவர்கள் ஏமாற்றவும், தவறாக வழிநடத்தவும் செய்துள்ளனர். மோடி அரசின் இரட்டைப் பேச்சுக்கள், பொய், போலித் தனம் ஆகியவை ரஃபேல் விவகாரம் மூலமாக வெளிவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி மீது மக்களவையில் பாஜக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.