யாழ்-இந்தியாவுக்கு பலாலி விமான நிலையத்திலிருந்து விமானசேவை.!

பலாலி வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வானூர்தி நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படவுள்ளது.

வானூர்திச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய வானூர்தி நிலையமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும். இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாது.

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இடையிலான முத்தரப்புச் சந்திப்பின் மேற்படி முடிவு நேற்று எட்டப்பட்டுள்ளது.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். இந்திய நிதி உதவியில் ஆரம்பிக்கப்படும் நோயாளர் காவுவண்டிச் சேவையை தொடங்கி வைப்பதற்காக

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும் யாழ்ப்பாணம் வந்தார். இரண்டு தரப்பினரையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்றுச் சந்தித்தனர். ஜெட்விங் விடுதியில் நேற்று மதிய உணவுடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரம் உயர்த்துவதற்கு முதல்கட்டமாக தற்போது இருக்கின்ற நிலையிலேயே இந்தியாவுக்கு வானூர்தி சேவைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தச் சேவையைத் தொடங்குவதற்கு உடனடியாக என்ன தேவைகள் உள்ளனவோ அவை பூர்த்தி செய்யப்படும். பன்னாட்டு வானூர்திகள் தரையிறங்குவதற்கும் இங்கிருந்து புறப்பட்டுச் செல்தற்கும் ஏதுவாக சமிஞ்ஞைக் குறியீடுகள் (navigation) அமைக்கப்படவேண்டும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆயத்திணைக்களம் என்பனவற்றைச் செயற்படுடுத்துவதற்கு இப்போதுள்ள கட்டடங்கள் போதுமா என்பதை ஆராயவேண்டும். இல்லாவிடின் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

என்று சிவில் வானூர்திப் போக்குவரத்துச்  சபையினர் சந்திப்பில் கூறியுள்ளனர். அவற்றை உடனடியாகச் செயற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக வருகைதந்து பலாலி வானூர்தி நிலையத்தைப் பார்வையிட்டு இந்தியாவுக்கான வானூர்திச் சேவைக்கான ஏனைய அடிப்படைத் தேவைகளை மதிப்பீடு செய்வார்கள்.

வானூர்திச் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பிராந்திய வானுர்தி நிலையமாக தரமுயர்த்தி ஏனைய நாடுகளுக்கான வானூர்தி சேவைகளும் நடத்தப்படவுள்ளது.

தற்போதுள்ள வானுர்தி ஓடுதளத்துக்கு மேற்குப்புறமாக 500 ஏக்கர் காணியில் புதிய வானூர்தி நிலையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வு மாதாந்தம் கொழும்பில் நடத்தப்படவுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும், இந்தியத்தரப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங், இரண்டாம் நிலைத் தூதுவர் யாழ்ப்பாணத்திலுள்ள தூதரகத்ின் கொன்சியூலர் ஜெனரல்  பாலச்சந்திரன், தூதரக அதிகாரிகளும்,

யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா. வேதநாயகன், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளை தளபதி, சிவில் வானூர்திப் போக்குவரத்துச் சபை பணிப்பாளர் நிமல்சிறி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.