ஐந்து குறும்படங்களை ஒன்றிணைத்து, அதைத் திரைப்படமாக வெளியிடுவதற்கான முயற்சி!

ஒரே கதைக் களம் கொண்ட ஐந்து குறும்படங்களை ஒன்றிணைத்து, அதைத் திரைப்படமாக வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.

2009ஆம் ஆண்டு மலையாளத்தில் கேரளா கபே என்ற படம் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மொத்தம் 10 கதைகள். இதனை லால் ஜோஸ், ரேவதி, சாஜி கைலாஷ், அஞ்சலி மேனன், பத்மகுமார் உள்பட 10 முன்னணி இயக்குநர்கள் இயக்கி இருந்தார்கள். மம்மூட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிருத்விராஜ், பகத்பாசில், நவ்யா நாயர், நித்யா மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இதே பாணியில் 2013ஆம் ஆண்டு மலையாளத்திலேயே ஐந்து சுந்தரிகள் என்ற திரைப்படம் வெளியானது. இது ஐந்து பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்து. ஐந்து கதையையும் மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஐந்து பேர் இயக்கி இருந்தார்கள். இப்படத்தில் அனிகா, காவியா மாதவன், நிவின் பாலி, துல்கர் சல்மான், பகத்பாசில் போன்றோர் நடித்திருந்தார்கள்.

இந்தப் பாணியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் சார்பாக செயல்படுத்தி இருந்தார். ஆனால் அது திரைப்படம் போல் இல்லாமல் குறும்படம் மாதிரி அமைந்திருந்ததால் பெரிய அளவில் சென்றடையவில்லை. அதனால் அதை கைவிட்டு அடுத்தடுத்து தனது படங்களில் பிசியானார்.

இதே முயற்சியில் இயக்குநர் வசந்த் சாயும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஒரே கதைக் களம் கொண்ட மூன்று எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துள்ளார். மலையாள படங்களைப் போல் நடிகர்கள் ஒவ்வொரு கதைக்கு மாறுபட்டாலும் இயக்குநர் ஒருவராகவே இருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து மலையாள சினிமா போன்று, ஒரு படத்தை உருவாக்க இயக்குநர் பா.ரஞ்சித் முயற்சி எடுத்துள்ளார். காலா படத்திற்கு பிறகு அவர் தனியாக ஒரு படம் இயக்கும் வேலைகள் மும்மரமாக இருந்தாலும், இந்தப் படத்திற்கான தயாரிப்பிலும் தீவிரமாக இருக்கிறார். இதில் ஐந்து கதைகள் இடம்பெறுகிறது. அதனை 5 முன்னணி இயக்குநர்கள் இயக்குகிறார்கள். தானும் ஒரு படத்தை இயக்குகிறார். 5 படங்களையும் இணைத்து ஒரே படமாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். இப்படத்திற்கு ‘குதிரைவால்’என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவிருக்கிறது.

அவரது நீலம் புரொடக்‌ஷன் சார்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.