40அடி கிணற்றில் 4 உடல்கள்!

ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் விவசாய கிணற்றில் கல்லால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சிக்குட்பட்ட சவுளுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் நதியா என்ற தம்பதிகளுக்கு 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய், பூவரசன், நிர்மல் ஆகிய 3குழந்தைகள் உள்ளன. இதில் முதல் மகன் சஞ்சய் பிறப்பிலிருந்து கால்கள் நடக்க முடியாமல் இருந்துள்ளார்.

திருமணமான கொஞ்ச நாட்களில் கட்டிட தொழில் செய்து வந்த லோகநாதன் நாளடைவில் அந்த தொழிலை விட்டுவிட்டு, கிரானைட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் மனைவி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், நதியா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த சில காலமாக லோகநாதன் சரியாக சம்பாதிக்காமலும், குடிப்பதற்காக மாற்று திறனாளி மகனுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பணத்தை மனைவியிடம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்தவாரம் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த நதியா தன் 3மகன்களையும் அழைத்துக்கொண்டு, கடந்த வியாழக்கிழமை தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, அன்று மாலையே நதியா தாய் வீட்டிலிருந்து திரும்பி வந்துள்ளார். ஆனால், அன்றிலிருந்து இந்த 4பேரையும் காணவில்லை. தாய் வீட்டார் பல இடங்களிலும் தேடிப்பார்த்துள்ளனர். சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக காரிமங்கலம் காவல்நிலையத்தில் 4 பேரையும் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.



இந்நிலையில், இன்று (ஜூலை 30) காலை லோகநாதனுடைய விவசாய நிலத்தில் உள்ள 40அடி கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் ஒன்றாக வாய், கண் கட்டப்பட்ட நிலையில் மிதந்ததைக் கண்டு அக்கம்பக்கத்தினர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு புகார் அளித்தனர். அங்கு விரைந்த போலீசார் 2 சிறுவர்களின் உடல்களை மீட்டனர். இதையடுத்து மீண்டும் அதே கிணற்றில் தேடி பார்த்தபோது நதியா மற்றும் இன்னொரு சிறுவன் இருவரது உடலும் ஒன்றாக கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து 4பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டி கங்காதர் நேரில் வந்து பார்வையிட்டார்.

இதனிடையே லோகநாதன் நதியாவை வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாகவும், இதற்கு லோகநாதனின் பெற்றோர்கள் மற்றும் உடன்பிறந்தவர்கள் உடந்தையாக இருந்ததாகவும் நதியாவின் உறவினர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, தற்கொலையா? கொலையா என்று லோகநாதனிடம் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.