குரு பூர்ணிமா!

சீரடி சாய்பாபாவை குருவாக ஏற்று அவர் சேவடியில் சரண் அடைந்த சிஷ்யர் நானாவின் நிகழ்வைப் பார்த்தோம். சாய்பாபா தன்னை ஒரு வழிகாட்டியாகவே அறிவித்ததால் அவரை குரு என்பதிலேயே நாம் எல்லாருக்கும் அதிக இன்பம்.

இன்று (ஜூலை 27) அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தில் குரு பூர்ணிமா நிகழ்வு. மிக பக்திப் பரவசத்தோடும், பாங்கோடும் நடந்தேறியிருக்கிறது. காலை ஆரத்தி முதல் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கி ஷேஜ் ஆரத்தியோடு பாங்காய் நிறைவுறுவது வரை குருபூர்ணிமா அக்கரைப்பட்டியை இன்று அழகுறச் செய்தது என்றால் அது மிகையல்ல.

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை; குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை, குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை, குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை. குருவிற்கு சமமான உயர்வுமில்லை

சிருஷ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டே இருக்கும்



'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார்.

அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு என்று சொல்கிறது ஸ்ரீ குரு சரித்திரம்.

ஆக நாம் குருவை வணங்கினால் வேறு யாரையும் வணங்க வேண்டாம் என்பதே இந்த குருபூர்ணிமாவின் கருத்துரு.

காகட ஆரத்தி, சிறப்பு அபிஷேகம், பல்லக்கு ஊர்வலம், சத்சரித பாராயணம், ஸ்ரீ சாய் நாத ஸ்தவன மஞ்சரி பாராயணம், மத்யான் ஆரத்தி, மஹா அன்னதானம், ஸ்ரீ சத்யநாராயண பூஜை, தூப் ஆரத்தி, ஷேஜ் ஆரத்தி என இன்று முழுவதும் அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தில், குருபூர்ணிமா விழா கோலாகலம் கண்டது.

ஸ்ரீசாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் மூலம் நடத்தப்பட்ட இந்த குரு பூர்ணிமா அக்கரைப்பட்டியில் கூடிய அத்தனை பேர் மனங்களிலும், அக்கரைப்பட்டியை நினைத்த அத்தனை பேர் மனங்களிலும் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

சாய்பாபா என்னும் குருவின் தாள் பணிவோம்! நெஞ்சில் அவர் நாமம் அணிவோம்! அருள் பெறுவோம்

(பாபா பரவசம் தொடரும்)

தொடர்புக்கு...

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.
akkaraipattishirdibaba@gmail.com
http://akkaraipattisaibaba.com/

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.