அக்கரைப்பட்டியில் அமர்ந்திருக்கும் அழகு!

அக்கரைப்பட்டி அடியவர்களிடம் இன்னும் குருபூர்ணிமா பற்றிய சிலாகிப்புகளும், நெகிழ்தல்களும் குறையவில்லை. முன்பெல்லாம் சாய்பாபாவின் அருமைகளை யாராவது பக்கத்தில் தெரிந்தவர்கள் இருந்தாலோ அல்லது குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோதான் பகிர்ந்துகொள்வார்கள்.

ஆனால் இப்போது சமூக வலை தளங்கள் இருப்பதால் பக்தர்கள் தாங்கள் உற்று உணர்ந்ததை அப்படியே ஃபேஸ்புக்கில் வைத்துவிடுகிறார்கள். சாய்பாபா ஃபேஸ்புக் படிக்கிறாரோ இல்லையோ, அனைவரது முகங்களையும், அகங்களையும் படித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி தங்கள் கருத்துகளை இடுகைகளாக இட்டு வைப்பதன் மூலம் அவர்களுக்கு ஓர் இன்பம். அதை படிப்பவர்களுக்கும் ஓர் இன்பம்.

அக்கரைப்படி சாய்பாபா பக்தர் ஒருவரின் குருபூர்ணிமா இடுகை இதயபூர்வமானது, அவர் இதே வார்த்தைகளை அக்கரைப்பட்டி சாய்மந்திர் சன்னிதானத்தில் எண்ணி எண்ணி இன்புற்று அதை அப்படியே இடுகைகள் ஆக்கியிருக்கிறார்.

“வணங்குபர்களுக்கு விரும்பியதைத் தரும் கற்பக விருட்சத்தைப் போன்றவரும், தத்துவத்தை அறிந்த சிறந்த சான்றோர்களால் வணங்கத்தக்கவரும், ஆனந்தத்தின் இளந்தளிர் போன்றவரும், சாஸ்திரங்களின் கடல் ஆனவருமான தலைசிறந்த குருநாதரை நமஸ்கரிக்கிறேன்.

ஆத்ம தியானத்திலேயே எப்பொழுதும் மூழ்கியிருப்பவரும், இந்திரிய விஷயங்களிலிருந்து விலகியிருப்பவரும், சாஸ்திரங்களில் மிகுந்த புலமை பெற்றவருமான ஸ்ரீ குருநாதரை போற்றி வணங்குகிறேன்.

எவர் ஆகாயமென்னும் பரம்பொருளில் மேகம் போன்று விளங்கி, வேதாந்தமென்னும் அம்ருதத்தை மழையாகப் பொழிந்து, ஜனங்களின் தாபங்களைப் போக்குகின்றாரோ அத்தகைய குருநாதரை வணங்குகிறேன்.

பக்தர்களுக்குக் கருணை காட்டுவதும், எவற்றின் ஒரு சிறிய ஒளிக்கீற்று கூட மனதின் முழு இருளையும் எப்பொழுதும் அழிக்கின்றதோ, அத்தகைய மேன்மையான குருவின் பாதங்களின் முன்னர் அனுதினமும் பக்தியுடன் வணங்குகிறேன்.

பரம்பொருள் ஆணவரும், மாயைக்கு இறைவனானவரும், கருணையின் கடலானவரும், தமது மாயையினாலேயே உடலைப் பெற்றுக் கொண்டவரும், ஒருபோதும் எவ்வித பந்தமும் இல்லாதவரும்,

ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு ஜீவன்முக்தி அடைந்ததாக தெய்வீக நாடகத்தை நிகழ்த்தியவரும், உலகிற்குக் குருவானவரும் எனக்கு எல்லாமுமான அவரிடம் மாத்திரம் சரண் புகுகிறேன்”

ஆகா... உலகின் குரு சீரடி சாய்பாபா இப்போது நமக்காக அக்கரைப்பட்டியில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

அவரது தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை தன் மன கண் முன் நிறுத்தவே பெரும்பாலான பக்தர்கள் விரும்புகிறார்கள்.

ஈடுஇணையற்ற சௌக்கியத்தை அனுபவிப்பதற்கு சுத்த ஞான மூர்த்தியாகிய சாய்பாபாவின் பாதங்களில் பணிவதைத் தவிர வேறு கதி ஏதும் தங்களுக்கு இல்லை என்கிறார்கள் அவர்கள்.

சாய்பாபா உட்கார்ந்திருக்கும் அந்த நிலையை, அந்த அழகைப் பார்த்திருக்கிறீர்களா?



அதுபற்றி ஒரு சாய் பக்தரின் அனுபவ வார்த்தைகளை ருசியுங்கள்.

அக்கரைப்பட்டி குருஸ்தானத்தில் இருக்கும் சாய்பாபாவை பார்த்து கேட்கிறார்.

.தாங்கள் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் கோலந்தான் என்னே ! அநேக பக்தர்கள் உங்களுடைய தரிசனத்திற்கு வரும்போது, உங்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்தி அகமகிழ்ச்சியாலும் பிரேமையாலும் பொங்குகின்றனர் அல்லரோ !

ஆஹா, உங்களுடைய பொற்கமலப் பாதம் ! அதை எவ்விதம் வர்ணிப்பேன் ! மரக்கிளைகளுக்கும் பிறைச்சந்திரனுக்கும் உள்ள சம்பந்தம் என்று சொல்லலாமோ? உங்களுடைய பாதத்தின் கட்டைவிரலைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வதில் தரிசன வேட்கையுற்றவர்கள் திருப்தியடைகின்றனர் அல்லரோ !

தேய்பிறைப் பருவத்து இரவுகள் முடிந்தவுடன் எல்லாரும் சந்திரோதயத்தைப் பார்க்கும் ஆசையில் மேற்கு நோக்கி உற்றுப் பார்க்கின்றனர்.

அதுபோலவே, உங்களுடைய வலக்காலை இட முட்டியின்மீது வைத்துத் தாங்கள் அமரும்போது பக்தர்களின் தீவிரமான தரிசன ஆசை நிறைவேறுகிறது.

இடக்கரத்தின் ஆட்காட்டிவிரலுக்கும் நடுவிரலுக்கும் நடுவே உள்ள இடைவெளி ஒரு மரத்தின் கவட்டைக் கிளைகளைப் போன்று வலக்கா­ல் கட்டைவிரலைக் கவ்விக்கொண் டிருக்கிறது. கட்டைவிர­லின் நுனியில் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல நகம் பளபளக்கிறது.

'உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு ஸகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் கட்டைவிர­லின்மீது தியானம் செய். இது பக்தியின் எளிய ஸாதனை" என்று பாபா குறிப்பால் உணர்த்துவது போல் தம்முடைய கால்கட்டைவிரலைக் கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா..

ஆஹா சாய்பாபாவின் ஆசனத்துக்குப் பின்னால் எத்தனை அரிய அழகிய உண்மைகள்?



ஸ்ரீ சாய் கற்பக விருக்‌ஷா டிரஸ்ட் சார்பில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அக்கரைப்பட்டி சாய்பாபா மந்திர் பற்றி இன்னும் இன்னும் பேசுவோம்,

(பாபா பரவசம் தொடரும்)

தொடர்புக்கு...

SREE SAI KARPAGAVIRUKSHA TRUST
[Public Charitable Trust Regd. No. 1379/2009]
475/4A4, Akkaraipatti, Kariyamanickam Road
Near Samayapuram, Mannachanallur TK
Trichy Dt, TN, India 621112.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.