முள்ளிவாய்க்காலுடன் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு முடிவடையவில்லை!

“இரத்தம் இன்றி சத்தம் இன்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலம் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள்
விழுங்கப்படுகின்றன.பூர்விகமாக வாழ்ந்த நிலங்களில் எமது இனத்தின் இன பரம்பல் திட்டமிட்டு மாற்றியமைக்கப்படுகின்றது.முள்ளிவாய்க்காலுடன் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது வேறு வடிவில் தொடருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பிய கண்டன அறிக்கையிலையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழர் தாயகப் பிரதேசம் என்ற கருப்பொருளையே இல்லாமல் செய்வதற்குரிய அத்தனை செயற்பாடுகளும் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செம்மையாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமது உரிமைகள் வேண்டி, வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடும் போது, அரசுக்கு நெருக்கடி கொடுக்காதீர்கள் அது வரப்போகும் தீர்வுத்திட்டத்தை பாதிக்குமென கூறுகின்ற சில மக்கள் பிரதிநிதிகள், இவ்விடயத்தில் கண்டன அறிக்கைளுடன் மட்டுப்படுத்திக் கொள்வது ஏன் என்று தெரியவில்லை.

குறித்த செயற்பாடு அவர்களும் இந்நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாக்கப்பட்டவர்களா என்ற சந்தேகம் எழுகின்றது.பேரினவாதிகள், இன்று மகாவலி அதிகார சபையின் அதிகாரங்களைக் கொண்டு இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை அன்றே தொடங்கி விட்டனர் என்பதை அதற்கு ஒரு ஆசிரியர் செய்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் நிருபித்து காட்டியுள்ளது.

அதாவது 1970 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட J,K,L என்ற வலயங்கள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்துள்ளது.இதில் K வலயம் கனகராயன் குளம், இரணைமடுக் குளம் என்பவற்றை மையமாககக் கொண்டு உருவாக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டு மகாவலித் திட்டத்தை துரித மகாவலி அபிவிருத்தி திட்டமாக மாற்றியது. இதன் போது மூலத்திட்டதிலிருந்த J,K,L என்ற வலயங்கள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு சரத்து பின்வருமாறு கூறுகின்றது, அருகருகே இருக்கும் இரண்டு மாகாணங்கள் விரும்பினால் சட்டம் ஒன்றை இயற்றி அதனூடாக ஒரே மாகாணமாக செயற்பட முடியும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் அருகருகே இருப்பதனால் எதிர்காலத்தில் இவை இணைந்து விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து 1988 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தக மானியில் L வலயம் விசேட நிலப்பரப்பாக மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.மணலாறு என்று அழைக்கப்பட்ட இப்பிரதேசம் வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பிரதேசம் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்திற்கு கடல் எல்லை ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்நடவடிக்கை வடக்கு கிழக்கு மாகாணங்களை நிலத் தொடர்பற்றதாக மாறின. பின்னர் இப்பிரதேசத்தில் சிங்கள மக்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டனர். தற்போது இப்பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு வெலிஓயா என்ற ஒரு பிரதேச செயலாளர் பிரிவாக இயங்குகின்றது.

மேலும் 2011 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 6949 பேர் ஆகும். இவர்களில் 6937 பேரும் சிங்களவர்களாவர். 10 பேர் தமிழராகவும் 2 பேர் முஸ்லிம்களாகவும் காணப்படுவதாக குறித்த மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கின்றது.இவ்வாறு முல்லைத்தீவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமையே யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மையமாகக் கொண்டு இரணைமடுக் குளப்பிரதேசத்திற்கும் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

குடாநாட்டின் குடிநீர்பிரச்சைனையை தீர்ப்பதாக கூறிக்கொண்டு இப்பிரதேசத்தை உள்ளடக்கிய K வலயம் விசேட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு மகாவலி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படுகின்றது என அரசாங்கம் எதிர் காலத்தில் அறிவிக்க முடியும் .இவ்வாறு தமிழ்தேசத்திற்கான அங்கீகாரம் கிடைக்காத வரை பல்வேறு வடிவங்களில் நில அபகரிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்” என வரதராஜன் பார்த்திபன் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.