திருகோணமலை நகரை வரிதற்ற நகரமாக்குவதின் பின்னணி சூழ்ச்சியா?

திருகோணமலை பெரு நகரத்திட்டம் (மெகா சிட்டி) என திருகோணமலை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

சிங்கப்பூர் அரசின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்படவுள்ள திருகோணமலை பெருநகரத் திட்டம் (மெகாசிட்டி) அரசினால் முன்மொழியப்பட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதியின் பரிசீலனைக்குப் பின்னர் குறித்த திருகோணமலை பெருநகரத் திட்டம் தற்போது திருக்கோணமலை நகரசபை நிர்வாகத்திடம் இறுவட்டு வடிவத்தில் பரிசீலனைக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

திருகோணமலை பெருநகரத் திட்டம் (மெகாசிட்டி) 10 வருடத்திற்கு மேற்பட்ட செயற்படு காலத்தை கொண்டுள்ளதாகவும் அறிகின்றேன்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசமாக திருகோணமலை நகரப் பகுதி விளங்குகின்றது.

அத்துடன், திருகோணமலை நகரப் பகுதியிலிருந்து புகையிரத நிலையம், பஸ் நிலையம், காலப் போக்கில் அரச பொது வைத்தியசாலை போன்றவற்றையும் அரசின் முக்கிய அரசு மையங்களையும் கந்தளாய் நோக்கி நகர்த்துவதன் மூலம் தமிழர்கள் செறிந்து வாழும் நகரப் பகுதியை வரிதற்ற நகரமாக்குவதில் பின்னணி சூழ்ச்சியை திருகோணமலை பெருநகரத் திட்டம் (மெகாசிட்டி) கொண்டுள்ளதா? என்ற வினா எமக்கும் திருக்கோணமலை நகரத்தில் வாழும் மக்களிற்கும் எழுந்துள்ளது.

எனவே திருகோணமலை நகரசபைத் தலைவரும் நகரசபை நிர்வாகமும், திருகோணமலை மெகாசிட்டி திட்டம் என்னென்ன அபிவிருத்தி செயற்றிட்டங்களை கொண்டுள்ளது.

குறித்த செயற்றிட்டங்களால் மக்களிற்கு கிடைக்கப் பெறும் பயன்கள் குறித்து வெளிப்படைத் தன்மையோடு விவாதிக்க முன்வர வேண்டும்.

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இத்திட்டம் குறித்து சிலாகித்து பேசியதோடு இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திருகோணமலை நகர சபைக்கும், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கும் படித்த துறைசார் தொழில்நுட்ப நிபுணத்துவம் சார்ந்தவர்களையே தலைவர்களாக நியமித்து இச்செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த போவதாக தெரிவித்து அவ்வாறு அவர் நிபுணர்களாக கருதியவர்களையே பல்வேறு முயற்சிகளின் பின் தலைவர்களாகவும் நியமித்துள்ளார்.

ஆனால் அத்தேர்தல் காலங்களில் மெகா சிட்டி திட்டம் குறித்தான அபிவிருத்தி திட்டம் குறித்தும் நோக்கம் குறித்தும் மக்களிற்கு தெளிவாக தெரிவிக்க அவர் மறந்து விட்ட நிலையில் தற்போது இத்திட்டம் குறித்து மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு உண்டு என்பதையும் இந்த தருணத்தில் அறிக்கை ஊடாக பதிவு செய்ய விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.