மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

  1. பூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.


இங்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி பூமியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுசெய்து வருகின்றனர்.

மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது.

இதுவரை அந்த பணிக்கு ரஷ்ய தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், பூமியை தவிர வேறு சில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தக ரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ரொக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது.

நாசா விண்வெளி மையத்திலிருந்து பயணிக்கவுள்ள இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

இந்த நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவிலிருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது தமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சி என ஹூஸ்டனில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட நாசா ஜோன்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.