உச்ச நீதிமன்ற நீதிபதியிடமே பேரம்!


உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியிடம் ஒரு வழக்கு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேரம் பேசியுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்றைய முன்தினம்(ஆகஸ்ட்-30) நீதிமன்றம் கூடியபோது கார்ப்பரேட் ஓட்டல் மீதான வழக்கு தொடர்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேரம் பேச முயற்சித்ததாக கூறி வழக்கறிஞர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். ஓட்டல் ராயல் பிளாசா என்ற கார்ப்பரேட் ஓட்டலின் வழக்கை விசாரித்து வருவதாகவும் அப்போது அது தொடா்பாக தொலைபேசியில் ஒருவர் தன்னிடம் பேரம் பேசியதாகவும் தெரிவித்தார்.

இதைக்கேட்ட நீதிபதி இந்திரா பானர்ஜியின் அருகிலிருந்த நீதிபதி அருண் மிஸ்ரா கூறுகையில்,எந்த நபராவது நீதிபதிகளிடம் இவ்வாறு பேச முயற்சித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் போடப்படும் என்று எச்சரித்தார். இதனைத்தொடர்ந்து தான் இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி பானர்ஜி கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி அருண் மிஸ்ரா அது போன்று விலகிக்கொள்ள வேண்டாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியதை இந்துஸ்தான டைம்ஸ் என்ற நாளிதழின் நிருபரிடம் உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்ள வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அது தவறான தகவலை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் என்று நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.