மக்களைத் துன்புறுத்தாதீர்கள்!

8 வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம் என மத்திய அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, திட்டப் பணிகளின் போது பொது மக்களைத் துன்புறுத்தக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசுத் தரப்பில் இன்று (செப்டம்பர் 20) தாக்கல் செய்யப்பட்டது.

அதைப் பார்த்த நீதிபதிகள், 8 வழிச்சாலை திட்டத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி பெறுவதற்கு முன்பே நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் தொடங்கியது குறித்தும், மக்களிடம் கருத்து கேட்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கும் போது, நிலங்களை உட்பிரிவு செய்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு, 8 வழிச் சாலை திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும், ஒருவேளை இத்திட்டத்திற்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காவிட்டால் திட்டத்தை தொடர மாட்டோம் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, தர்மபுரி மாவட்டம் அரூரில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக 1,200 மரங்களை அரசு நடவுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறி செய்யாறு பகுதியில் காவல் துறையால் மக்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திட்ட பணிகளின்போது பொது மக்களைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் அதிகாரி கண்காணிப்பது குறித்து செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில் முரண்பாடு இருப்பதாகக் குறிப்பிட்டு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.