மட்டக்களப்பில் குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி ஹர்தாலுக்கு அழைப்பு!

தென் தமிழீழம் , மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் செப்டம்பர் 07ஆந் திகதி மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.
தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –

புல்லுமலை தண்ணீர் தொழிற்ச்சாலைக்கு எதிரான போராட்டமானது ஒரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது அல்ல.

புல்லுமலை கிராமமானது குடி தண்ணீர் இல்லாத மிகவும் வரட்சியான வானத்தை நம்பி வாழும் கிராமமாகும்.



இந்த நிலையில் நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான நீர் உறிஞ்சப்படுமானால் சிறு குளங்களும் வற்றி கிராமமே சுடுகாடாகி விடும் நிலை ஏற்படும்.

மட்டக்களப்பு புல்லுமலை கிராமத்தில் காத்தான்குடி நகர சபை தலைவரால் தண்ணீர் தொழிற்சாலை அமைத்து நாளொன்றிற்கு 20 ஆயிரம் லீட்டருக்கு மேலான குடி தண்ணீரை போத்தலில் அடைத்து அரபு நாட்டிற்கு விற்பனை செய்யும் திட்டமாகும்.

இதனால் கால போக்கில் புல்லுமலையையும் அதனை அண்டியுள்ள கிராமங்களும் வரண்ட நிலமாக மாறிவிடும். குறித்த கிராமங்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் பிரதானமாக கொண்ட கிராமமாகும்.

இதனை நிறுத்துமாறு கோரி பல தடைவைகள் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறியும் கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை மற்றும் ஜனாதிபதி இவ்விடயத்தை அலட்சியம் செய்த காரணத்தினால் இதை கண்டித்து செப்டெம்பர் 7ம் திகதி மாவட்டம் தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வீட்டிற்குள் முடங்கியிருந்து வெளியே வராது போராட்டத்தை முன்னெடுக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதே சமயம் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வர்த்தக வணிக வியாபாரிகள் அன்றைய தினம் ஒத்துழைப்பு வழங்குமாறும், பொது மக்கள் போக்குவரத்துக்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்” என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.