கிளிநொச்சியில் முக்கியஸ்தர்கள் முன்பாக மரத்திலேறி போராட்டம்!


பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் முதியவர் ஒருவர் மரத்தில் ஏறி போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக்கொண்டிருந்தார்.

இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிபொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.


அத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிரதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் ஏறி முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக் கொண்டிந்தார்.

உடனடியாக பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இருந்து இறக்கிய போது அவர் கையில் வைத்திருந்த பதாகையில் “வேண்டாம்” எனும் தலைப்பில் “அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது உங்களுக்கு சேவை செய்வதற்கே, உங்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை” எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது உங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தது.


இதனை கையில் வைத்திருந்த முதியவர் “பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும்” தெரிவித்தார்.

இந்த நிலையில் பொலிஸார் அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.