ஏழு பேரையும் விடுதலை செய்யுங்கள்!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இதனையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது. அந்தப் பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

ஏழுபேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் விடுதலைக்கு எதிர்ப்பு குரல் மீண்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைந்து கையெழுத்திட வேண்டும் எனப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி கொள்ளும் சிலர் குழுவாக செயல்படுகிறார்கள். அவர்கள் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்க்கிறார்கள்.

அவர்களின் விடுதலையை எதிர்ப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? என் மகன் விடுதலையை எதிர்ப்பவர்கள் ஒரு நிமிடம் யோசியுங்கள். என்னுடைய 28 ஆண்டுகால போராட்டத்தை எல்லோரும் கண் கூடாக பார்த்துள்ளார்கள்.

ஆனால், அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் என்னையும், எனது மகனையும் ஏன் சேர்க்கவில்லை. செய்யாத குற்றத்திற்காக நாங்கள் 28 ஆண்டுகள் பேரழிப்பை சந்தித்துள்ளோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது மிகப்பெரிய துயரம்தான். அதனை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது நடந்து முடிந்துவிட்டது. அவர் எங்களுக்கும்தான் பிரதமர். நானும் இந்த நாட்டு பிரஜைதான்.

தமிழ்நாட்டில்தான் நாங்களும் வாழ்கிறோம். 19 வயதில் என் மகனை கைது செய்தார்கள். 28 ஆண்டுகளாக அவன் சிறையில்தான் இருக்கிறான். அவனுக்கு பல வியாதிகள் இருக்கிறது. அனைத்திற்கும் அவன் மருந்து சாப்பிடுகிறான். என் மகனின் வாழ்க்கையே போச்சு.

இளமை போச்சு. என் மகனின் ஒருநாள் இளமையை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா?. என் மகன் விடுதலை பெற்று வந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் எங்களுடன் வாழ்வான். அது அவர்களுக்கு பொறுக்கவில்லை. எனக்கு 70 வயதிற்கு மேல் ஆகிவிட்டது.

எனக்கு பல வியாதிகள் உள்ளன. மருந்து சாப்பிட்டுக் கொண்டே போராடி வருகிறேன். என் கணவரும் வியாதியால் போராடி வருகிறார். என் மகனின் விடுதலையை எதிர்ப்பவர்களை யாரோ வற்புறுத்துகிறார்கள். இதனை அவர்களில் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

உண்மையான குற்றவாளிகள் யார் என்பதே தெரியாமல் விசாரணை சென்று கொண்டிருப்பதாக என் மகன்தான் வழக்கு தொடர்ந்தான். பேரறிவாளன் வாங்கிக் கொடுத்த பேட்டரியில்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா? என்பது இன்னும் நிரூபணம் ஆகவில்லை.

அதேபோல், வெடிகுண்டு தயாரித்தவரிடம் விசாரணை நடத்த இலங்கை அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்தான் என் மகன் மரண தண்டனைக் கைதியாக மட்டுமே 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருகின்றான் என்றார்.

மேலும், மும்பை குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் அந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்வது குறித்து கருத்து கேட்காத போது தன் மகன் விடுதலை செய்வது குறித்து ஏன் கருத்து கேட்கவேண்டும் எனப் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, மும்பை குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை.

நடிகர் சஞ்சய் தத்தை விடுதலை செய்வது குறித்து மட்டும் யாரிடமும் கருத்து கேட்கவில்லையே ஏன் என்கிறார் அற்புதம்மாள்.
#Rajiv Gandhi   #Perarivalan  #india  #apputhama  #tamilnews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.