ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி? ஸ்டாலின் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை என்று மத்திய நீர்வளத் துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை ஏற்க முடியாது என்று கூறி, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, அது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும்போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக - அந்த ஆலையைத் திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பாஜக. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
“மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினை ஆய்வு செய்யும் போது, உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து விட்டு, இப்போது மத்திய அரசின் அறிக்கை வெளிவந்த பிறகு - ஏதோ தங்களுக்குத் தெரியாமல் ஆய்வு நடந்து விட்டது போல் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி, தமிழக தலைமைச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கையை எதிர்க்க வைத்திருப்பது அதிமுக அரசும் - மத்திய பாஜக அரசும் தனியார் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், உள்நோக்கத்துடன் திரைமறைவுக் கூட்டணி வைத்துள்ளன என்பது தெரிகிறது.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ‘இவ்விவகாரத்தில் கொள்கை முடிவு எடுங்கள்’ என்று கூறிய போது அதையும் நிராகரித்து விட்டது அதிமுக அரசு. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையாக இந்த வழக்கில் வாதங்களை எடுத்து வைக்காமல்,‘ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறப்பதற்கு’ துணை போனது அதிமுக அரசு. தமிழகத்தில் எத்தனையோ மூத்த உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருந்தும், வெளி மாநிலத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை ‘ஆய்வு கமிட்டியின் தலைவராக’ நியமிப்பதற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இடமளித்து மவுனம் காத்தது தமிழக அரசு.
ஆகவே, சுற்றுப்புறச்சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக் குறித்த ‘அதிகாரத்துடன் ஆணவத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு’ தயாரித்துள்ள ஒரு ‘நீர் ஆய்வு’ அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுக அரசு இப்படி அதிகாரிகள் மூலம் கடிதம் எழுதி எதிர்ப்புத் தெரிவிப்பதை விடுத்து, உடனடியாக இந்த ஆய்வு அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றிட வேண்டும் என்றும்; அந்த அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் நிராகரித்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மாநில அரசின் அதிகாரத்தில் உள்ள சுற்றுச் சூழல் துறைக்கு தெரிவிக்காமலேயே மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டது கடும் கண்டனத்துக்குறியது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வைகோ, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட இந்த ஆய்வு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். எந்த நிர்பந்தத்திற்கும் அடிபணியாமல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.