அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துகின்றது!

வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடுத்து அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு
செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபை அதிகாரப் பகிர்வவைக் கோருகின்ற போதிலும் இருக்கின்ற அதிகாரங்களையே சரியான முறையில் பயன்படுத்த தவறியுள்ளது. அவர்கள் தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும்.
ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர்கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுகளைக் கட்டிக் கொண்டு தமது குடும்பங்களுடன் சந்தோசமாக இருப்பார்கள்.

அதன் பின்னர் வாக்களித்த மக்களிடம் வருகின்ற போது விடுதிகளில் தங்கியிருப்பார்கள். அதுவும் தேர்தல் காலங்களிலேயே இங்கு வருவார்கள். ஆனால் நாங்கள் அப்படியில்லை. எப்போதும் மக்களுடன் மக்களாக இருப்போம்.
இந்த மக்களுடன் இருப்பவர்களையே எதிர்வரும் தேர்தல்களிலும் வேட்பாளர்களாக நிறுத்துவோம். வடக்கு மக்களுக்காக செயற்படுவதற்கு நாங்கள் வடக்கிற்கு வந்திருக்கிறோம்.

அதற்கமைய வடக்கு மக்களும் தமக்காக செயற்படுகின்றன எம்மைப் போன்ற தரப்பினர்களுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும்.
அதனூடாக எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு எம்மாலான அனைத்தையும் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.