பேட்ட’ படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் இணைந்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாஸுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கதாநாயகிகளாக த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் ஒப்பந்தமானார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய திரையுலகைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே பிரம்மாண்ட கூட்டணியுடன் களம் காண்கிறார்.

பேட்ட படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கம், சென்னை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே வெளியாகியுள்ள இரு போஸ்டர்கள் மூலம் ரஜினிக்கு இந்தப் படத்தில் இரு வித்தியாசமான தோற்றங்கள் தரப்பட்டுள்ளது தெரியவந்தது. முன்னணி நாயகர்கள் பலரும் இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து தங்களது காட்சிகளைப் படமாக்கிவந்த நிலையில் நேற்று மாளவிகா மோகனன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இது குறித்த தகவலைத் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“சிறு குழந்தை போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்திய சினிமாவின் முக்கியமான நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறேன். எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது” என்று பதிவிட்டுள்ளதுடன் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டரை பதிவேற்றியுள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.