மட்டக்களப்பில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது

மட்டக்களப்பு- மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்று வரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றி வரும் பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பு தேடிச் சென்ற நிலையில், சிறுமி அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில், குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.