நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழந்தனர். எந்த மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை என அந்நாட்டின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தின் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே அடிகடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று இரு தரப்பினரிடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட சண்டை கடும் மோதலில் முடிந்தது. இந்த மோதலில் சுமார் 55 பேர் பலியாகினர். மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாகாண போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். மோதலை தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு மத ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் குறித்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ எந்த மதமும் அல்லது கலாசாரமும் வன்முறையை ஆதரிப்பது இல்லை. சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுவது அவசியம் ” என்று கூறியுள்ளார்.

மேலும், “ வெவ்வேறு மத நம்பிக்கை உள்ள மக்களிடம் நல்லிணக்கம் இல்லாதவரையில், நமது அன்றாட பணிகளை நாம் செய்து முடிப்பது சாத்தியம் இல்லாமல் போய் விடும். இந்த பிரச்சினையில், மத தலைவர்கள் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்க வேண்டும். வேற்றுமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் ” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.