சீனா: குழந்தைகளைத் தாக்கிய பெண்!

சீனாவின் சோங்கிங் நகரிலுள்ள மழலையர் பள்ளியொன்றில் இருந்த குழந்தைகளைக் கத்தியால் தாக்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபகாலமாக, சீனாவில் கத்தியால் குத்திக் கொல்லப்படும் சம்பவங்கள்

அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் சாங்ஸி மாகாணத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடுநிலைப்பள்ளி மாணவர்களைக் கத்தியால் குத்திய வாலிபர் கைதானார். இவரது வயது 28. இந்த சம்பவத்தில், 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர். சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, தான் கடுமையாகத் தாக்கப்பட்டதற்குப் பழி வாங்கவே இவ்வாறு செயல்பட்டதாகத் தெரிவித்தார் அந்த நபர். கடந்த செப்டம்பர் மாதம் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதே போன்ற சம்பவம், இன்று (அக்டோபர் 26) அங்குள்ள சோங்கிங் நகரில் நடைபெற்றுள்ளது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில், பெய்ஜிங் நகரிலிருந்து 1,105 மைல் தொலைவில் உள்ளது பானான் மாவட்டத்திலுள்ள சோங்கிங் நகரம். இன்று காலையில், சோங்கிங் நகரிலுள்ள யுடாங் நியூ செஞ்சுரி மழலையர் பள்ளிக்குள் நுழைந்தார் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர். விளையாட்டு வகுப்பு முடிந்து திரும்பிய சிறு குழந்தைகளை, அந்த பெண் திடீரென்று கத்தியால் தாக்கினார். இதனால் குழந்தைகளின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு, பாதுகாவலர்களும் பள்ளி ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். விரைந்து சென்று, அந்த பெண்ணைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள் காயமடைந்தனர் என்றும், அவர்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சையளிக்க அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லியூ என்ற பெயருடைய அந்தப் பெண், தனது கணவரோடு ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இத்தாக்குதலில் 2 குழந்தைகள் மரணமடைந்ததாகப் பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது சீன அரசு. பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, லியூ இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என்று தகவல் பரவி வருகிறது. ஆனாலும், மழலையர் பள்ளிக்கு அவர் சென்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.