“தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!
“தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!” என வட அமெரிக்காவில் நடைபெற்ற “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” கருத்தரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.


“வட அமெரிக்கத் தமிழர்கள்” அமைப்பின் சார்பில் வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” தலைப்பிலானதொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும், வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் “இலங்கை தமிழ்ச் சங்கத்தின்” 41ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காகவும்தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார். வாசிங்டன், செயின்ட் லூயிஸ்,மின்னாபோலிஸ், நேவார்க், சைரக்கஸ், நியூஜெர்சி, வட கரோலினா, அட்லாண்டா, சியாட்டில், டல்லஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றுகிறார்.
கடந்த 2018 அக்டோபர் 26ஆம் நாள், வட அமெரிக்காவின் மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” - தொடர்கூட்டங்களின் முதல் நிகழ்வாக, “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
திரு. வீரபாண்டியன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கமாக, ஐயா பெ. மணியரசன் அவர்கள் குறித்த குறும்படம் ஒளிபரப்பானது. இதனை யடுத்து, ஐயாபெ. மணியரசன் கருத்துரையாற்றினார். அவர் பேசியதன் சுருக்கம் :
“வட அமெரிக்கத் தமிழ் மக்களோடு கலந்துரையாடும் வகையில், எனக்கு இக்கூட்டங்களில் பங்கெடுக்க வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியப்பேரியக்கம் சார்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வட அமெரிக்காவின் இந்த பால்வின் நகரத்தில் - இந்த குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் திரண் டிருக்கும் தமிழ் உள்ளங்களுக்கு எனது வாழ்த்துகள்!
கடந்த காலங்களைவிட தமிழின உணர்வு, தமிழின உரிமை உணர்ச்சி தமிழ்நாட்டிலும் அதிகமாகியுள்ளது; தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும்அதிகமாகியுள்ளது.
புலத்தில், இந்த உரிமை உணர்வு இன்னும் கூடுதலாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதற்குக் காரணம், நம் தமிழரிடையே உள்ள தாயகப் பற்று, தாய்மொழிப்பற்று, உரிமை குறித்த கூடுதலான அக்கறை ஒருபக்கம்; அதுவும், அயல் நாட்டில் வாழும் போது, அவர்கள் தங்கள் இனப்பெருமிதங்களையும், தங்கள் மொழிப் பெருமைகளையும் கூறும்போது, நம் மனம் நம் தாயகத்தின் பெருமிதங்களைத் நாடிச் செல்லும்! நம் தாய்மொழியின் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் கூடுதல் அக்கறைசெலுத்த உளவியல் வழி ஏற்படுத்தும்!
இன்றைக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடந்த காலங்களை விட அதிகளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போல கட்சிகள் - நம் மக்களை ஓட்டுமந்தையாகக் கருதிய காலம் கடந்துவிட்டது. கட்சிகளைத் தாண்டி, உயிர் துடிப்புள்ள போராட்டங் களை தமிழ்நாட்டு மக்கள் அங்கே நடத்திக் கொண் டுள்ளனர்.
தமிழர்களின் பண்பாட்டு உரிமையான ஏறுதழுவல் உரிமை பறிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் மிகப் பெரும் கட்சிகளாக விளங்கும் தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளின்தலைவர்களால் அதை மீட்டுக் கொடுக்க முடியவில்லை. அவர்களது முயற்சிகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவர்களதுகுரலுக்கு செவி சாய்க்கவில்லை!
ஆனால், இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் சல்லிக்கட்டு சட்டம் வந்தால்தான் களைவோம் என்ற உறுதியோடு, சென்னை கடற்கரையில் இலட்சக் கணக்கில்கூடினார்கள். தமிழ்நாடெங்கும் பல்லாயிரக் கணக்கில் கூடினார்கள். சல்லிக்கட்டு விளையாட்டு நடை பெறாத கோவையில்கூட பல்லாயிரக்கணக்கில் கூடினார்கள்.அவர்களை இணைத்தது தமிழின உணர்ச்சி!
ஏறுதழுவல் எழுச்சியை, எந்தக் கட்சியும் பின்னணி யிலிருந்து நடத்தவில்லை! தன்னெழுச்சியாக அது நடந் தது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தமிழினத்தின்எழுச்சியாக அது அமைந்தது. கட்சிகள், பின்னால் வந்து இதை ஆதரித்தன.
காவிரிப்படுகையின் நெடுவாசலில் - கதிராமங் கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம் அப்படித் தான் தன்னெழுச்சியாக நடக்கிறது. அதை, பிற கட்சிகள்பின்னால் வந்து ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது. கதிராமங்கலத்திற்கு நாங்கள் போனபோது, எங்களைக் காவல்துறையினர் கைது செய்தார்கள்.
அப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில், எந்தக் கட்சிப் பின்னணியும் இல்லாமல், மக்கள் ஆண்களும், பெண்களுமாக ஐம்பதாயிரம் பேர்தன்னெழுச்சியாக ஒன்றுகூடிப் போராடினார்கள். துப்பாக்கிச்சூடு நடைபெற்று, 13 மனித உயிர்களை பலிவாங்கியது தமிழ்நாடு அரசு! துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளேமே 23 அன்று, நாங்கள் தூத்துக்குடி சென்றோம்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவி ஸ்னோலின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்னோலினின் அம்மா, பெரியம்மா போன்றோர் கதறிக் கொண்டு, ஓய்வின்றி அழுதுகொண்டிருந்தனர். தமிழ்நாடே உங்கள் மகளுக்காக அழுது கொண்டிருக்கிறது என்றுகூறி அவரை நாங்கள் தோற்ற முயன்றோம். முடியவில்லை! அந்த சூழலிலும்கூட,ஆலையை நிரந்தரமாக மூடாமல் எங்கள் பாசமிகுப் பிள்ளையின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்னோலின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். அந்த வீரஉணர்ச்சிதான், தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள மாற்றம்!
கட்சிகளால் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, மக்கள் தாங்களாகவே களத்தில் இறங்கிப் போராடும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. 2009ஆம் ஆண்டு, தமிழீழ இன அழிப்புப் போருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் இது!
பழைய காலத்தில், கிழக்கிந்தியக் கம்பெனிகள் நம் மண்ணை சூறையாடியதைப் போல், இன்றைக்கு வடக்கிந்தியக் கம்பெனிகள் வேட்டையாடிக் கொண் டிருக்கின்றன.மண்ணை மீட்கப் போராடிய வேலு நாச்சியார், புலித்தேவன், மருது சகோதரர்களை எப்படி அழித்தார்களோ, அதைப் போல போராடும் தமிழ் மக்களை காவல்துறைகொண்டு ஒடுக்குகிறார்கள். நம் காவல்துறையே அவர்களுக்கு இராபர்ட் கிளைவ் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தில்லியில் “சனநாயக” முறைப்படிஅமைக்கப்பட்ட “வைசிராய்”களை வைத்து, நம்மை ஒடுக்குகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியைவிட மோசமாக வடக்கிந்தியக் கம்பெனிகளால் - இந்திய அரசால்தமிழ்நாடு சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது ஐட்ரோகார்பன் எடுப்பதற்காக தமிழ் நாட்டின் காவிரிப்படுகையையும், கடற்கரையையும் ஏலம் விட்டுவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை 3 வட்டாரங்களாகப் பிரித்து, அதில் இரண்டை ஸ்டெர்லைட் “வேதாந்தா”வுக்கும், இன்னொன்றைஓ.என்.ஜி.சி.க்கும் கொடுத்திருக்கிறார்கள்.
“இனிப்பு கடை” என்றால் எல்லா வகை இனிப்புகளும் இருப்பதுபோல், “ஐட்ரோ கார்பன்” என்று பொதுப் பெயர் வைத்து எல்லாவற்றையும் எடுக்கிறார்கள். மீத்தேன்என்றால் எதிர்ப்பு வரும் என்பதால், “ஐட்ரோ கார்பன்” என்ற பொதுப் பெயர் வைக்கப்பட்டு, பெட்ரோலியம் - மீத்தேன் என அவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய பாசன நிலங்கள் பாழ்பட்டுப் போகும் நிலை வரப்போகிறது!
இந்திய அரசமைப்புச் சட்டப்படி “நிலம்” என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் இந்திய அரசு கவலை கொண்டதாகவேதெரிகிறது. அதைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழ்நாடு அரசுக்கும் இல்லை!
இவற்றையெல்லாம் எதிர்த்துக் கூடுவதையே சட்டவிரோதம் என்கிறது தமிழ்நாடு அரசு! எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பக்கத்து வீடு பாதிக்கப்பட்டால், நாம்அவர்களுக்கு ஆதரவாக நின்றால் கூட நம்மை “வெளியாள்” என்று தனிப்பிரித்து, கைது செய்கிறது தமிழ்நாடு காவல்துறை! பக்கத்து வீட்டுக்காரனுக்கு நாங்கள்“வெளியாள்” என்றால், எங்கள் மண்ணில் வந்து கால் பதிக்கும் நீங்கள் யார்? காவல்துறை யார்? வேதாந்தா யார்? இந்திய அரசு யார்?
இப்படி நம் மண்ணில் நாசகரத் திட்டங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், தமிழர் தாயகமே வெளி மாநிலத்தவரால் பறிபோய்க் கொண்டுள்ளது. தமிழ் நாட்டின் எல்லாஇடங்களிலும் வெளியார் குவிந்து கிடக்கிறார்கள். தேங்காய் பறிப்பிலிருந்து வயல்வெளி வேலைகள் தொடங்கி, அனைத்து வேலைகளிலும் வெளி மாநிலத்தவர்தான்இருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை!
இந்தியாவின் பிற மாநிலங்களில் இவ்வாறான நிலை இல்லை. மண்ணின் மக்களுக்கே வேலை என அங்கெல்லாம் தனிச் சட்டங்கள் இயற்சி வைத்துள்ளனர்.வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல விசாவுக்கு நிகராக - உள் அனுமதிச் சீட்டுமுறை வைத்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் என்ன சட்டம் இருக்கிறது தெரியுமா?
கடந்த 2016 செப்டம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா இருந்தபோது, நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசின்பணிகளுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் வரலாம், பிற மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேப்பாளம், டான்சானியா போன்ற பிற நாட்டவரும் வரலாம்என்றொரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
இப்படி அயலாரை கணக்கில்லாமல் விட்டதால்தான், அசாமிலும், திரிபுராவிலும் மண்ணின் மக்கள் சிறுபான் மையினராகிவிட்டார்கள். அதற்காகத்தான், இப்போதுஅசாமில் மண்ணின் மக்கள் யார், வெளியார் யார் என்பதற்கான “குடிமக்கள் கணக்கெடுப்பு” நடத்தப் பட்டு, அதில் 40 இலட்சம் பேர் அயலார் என்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசாமின் பா.ச.க. முதல்வர் அந்த 40 இலட்சம் பேருக்கு எவ்வித உரிமைகளையும் வழங்க முடியாது, ரேசன் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கானதேவைகளை மட்டும்தான் செய்ய முடியும் என்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் உண்டா? தி.மு.க. - அ.தி.மு.க.வில் இப்படிப் பேசும் தலைவர்கள் உண்டா? அடைந்தால் திராவிட நாடு என்றுபேசியவர்கள், ஏன் மண்ணின் மக்களுக்கு வேலை என்று சட்டம் இயற்றி, அதை உறுதி செய்யவில்லை?
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு, தனிநபர் பகை அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டின்உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன.
தமிழ் மக்களின் உளவியல், தற்சார்பு உணர்வு, தன்மான உணர்வு ஆகியவை இக்கட்சிகளால் சீரழிக்கப்பட்டுள்ளன. அதனால்தான், நம் மக்கள் ஆங்கில மோகத்திலும்,இந்தி மோத்திலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். இன்றைக்கு, தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.வீதிக்கு வீதி புதிதாக - இந்திய அரசின் நடுவண் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன. இங்கே வட அமெரிக்கா வில் அப்படி செய்யமுடியுமா?
அமெரிக்காவில் இங்குள்ள மாகாணப் பாடத் திட்டத்தை மீறி நாம் ஏதாவது செய்திட முடியுமா? பெரிய ஏகாதிபத்தியமாக விளங்கினாலும், இப்படி கீழே அதிகாரத்தைக்கொடுத்து வைத்திருக்கிறார்கள் அல்லவா? இதைத்தான் நாம் கேட்கிறோம்!
உலகத்திலேயே கூட்டாட்சி குறித்து சிறப்பாகப் பேசப்பட்ட நாடு அமெரிக்காதான்! அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கும்போது ஹாமில்டன், பெஞ்சமின்பிராங்களின், தாமஸ் ஜெபர்சன் போன்ற அறிஞர்கள் அங்கிருந்தனர். ஒரு தேசிய இனம் தனக்கான சொந்த அரசு அமைத்துக் கொள்ளும் தன்னுரிமை (Right to Self Determination) என்பதைக் கொள்கையளவில் முதன் முதலாக இங்குதான் பேசினார்கள். பல அறிவாளர்கள் இங்கே இருந்தனர்.
“அமெரிக்க ஐக்கிய நாடுகள்” உருவாவதற்கு முன்பே, இங்கிலாந்திலே 15ஆம் நூற்றாண்டு வாக்கில், ஆங்கிலேயர், ஸ்காட்லாந்தியர், வேல்ஸ் மற்றும் அயர்லாந்துஇனத்தவர் ஆகியோரால் ஒரு கூட்டாட்சி உருவாகி, அதற்குப் பல்வேறு பெயர்களை சூட்டினர். கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் “ஐக்கிய இராச்சியம்” (யுனைடெட்கிங்டம்). அதுபோல், இங்கு “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா)! அதாவது, நாட்டின் பெயரில் எந்த இனத்தின் பெயரும்வந்துவிடக்கூடாது என்ற பொது சிந்தனை இங்கிருந்தது.
இதை வைத்துதான் இரசியாவில் இலெனின், “சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” (யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக்ஸ்) என்று பெயரிட்டார்.இந்தியாவிலும் அரசமைப்புச் சட்டத்தில் “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்று இந்தியாவைக் குறிப்பிட்டனர். இப்போது, அவற்றையெல்லாம் காலி செய்துஒற்றையாதிக்கத் திணிப்பு நடந்து கொண்டி ருக்கிறது.
நம்முடைய வளமான தமிழர் மரபைக் கொண்டு, இதை நாம் எதிர்க்க வேண்டும். நமக்கு சங்க காலத்திற்கு முன்பிருந்தே “தேசம்”- “தேசியம்” குறித்த சிந்தனைகள்இருந்தன. தமிழ்நாடு, தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டியர் காலத்திலேயே நம் இலக்கியங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. மொழியை வைத்து தேசத்தை அடையாளம் காணும் சிந்தனை முறை இங்கிருந்தது.
எனவே, நமது மண்ணுரிமையைக் காக்க நாம் புதிய விழிப்புணர்வைப் பெற்றாக வேண்டும். அரசியல், பொருளியல், பண்பாடு, அறம் என அனைத்திலும் ஒரு மாற்றுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு - தமிழ்த் தேசியமே அந்த மாற்றுத் திட்டம்! அது குறித்த சிந்தனைகளை நாம்மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்”.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
கருத்துகள் இல்லை