மைத்திரியின் பேச்சை நம்ப முடியாது- பிரசன்ன ரணதுங்க எம்.பி.!
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கூட்டு எதிர்க்கட்சி இப்படியான தீர்மானம் ஒன்றை எடுக்கும் போது மக்களின் கருத்தை அறிய வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது காணப்படும் நிலைமைக்கு அமைய உடனடியாக தேர்தல் ஒன்றே நடத்தப்பட வேண்டும். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும், இதே யோசனையை அவர்கள் முன்வைத்த னர்.
தலைமை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறினார் என்று தெரிவித்துக் கொண்டு வந்தனர். இறுதி நேரத்தில் அரச தலைவர் அதைக் கைவிட்டார்.
இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத் தின் பின்னால் ஓடியதால், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை எம்மால் அனுபவிக்க முடியாது போனது. பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் ஐக்கியமானது.
கூட்டு எதிர்க்கட்சியை ஏமாற்ற, அரசு அமைக்கும் யோசனை முன்வைக் கப்படுகின்றதா என்ற சந்தேகமும் எமக்குள்ளது. என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம்.
நாட்டுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களை கூட்டு எதிர்க்கட்சி ஆதரிக்கும். மக்களின் கருத்தையும் அறிய வேண்டும்.
நாட்டை அழித்த ரணில் – மைத்திரி இருவரில் ஒருவருடன் இணைவதையும் மக்கள் விரும்ப மாட்டார்கள். தேர்தலுக்கு சென்று அரசைக் கலைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருந்தோம். நாட்டின் நிலைமையை பார்க்கும் போது, இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்கின்றனர்.
ரணில் – மைத்திரி விலகுவது இந்த பிரச்சினைக்கு தீர்வாகாது. அப்படியானால் தேர்தலுக்கு செல்ல வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைவது என்பதைக் கூட்டு எதிர்க்கட்சி சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீது எப்படி நம்பிக்கை வைப்பது. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றாலும் தலைமை அமைச்சராக நியமிக்க மாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன கூறினார்.
கூட்டு எதிர்க்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து அமைக்கும் அரசில் யார் தலைமை அமைச்சர் என்பன போன்ற விடயங்கள் பற்றியும் பேசவேண்டியுள்ளது -– என்றார்.
கருத்துகள் இல்லை