மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டவர் கைது!

மம்தா பானர்ஜி குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்ட திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ரோஹிங்யா அகதிகள் பிரச்சினையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை விமர்சித்து பேஸ்புக் தளத்தில் அவதூறு கருத்துகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகள் அதில் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பதிவை திரிபுரா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளியிட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இரு மாநில போலீசாரும் இணைந்து அந்த வாலிபரை கைது செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

இதன் பயனாக திரிபுராவின் தலாய் மாவட்டத்தை சேர்ந்த துஷார் சர்மா என்ற அந்த வாலிபர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்து கமல்பூரில் உள்ள கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, துஷார் சர்மாவை 3 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

#MamtaBanerjee #Facebook  #மம்தா #பானர்ஜி #பேஸ்புக்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.