காஷ்மீரில் நாளை முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நகராட்சி தேர்தல்களும், பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார்.

இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறவுள்ளது.
நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு - காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசீன் மாலிக் ஸ்ரீநகரின் அபி குஸார் பகுதியில் உள்ள அலுவலகத்தில் கடந்த இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (8-ம் தேதி) தொடங்குவதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மிதவாத ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் இன்று போலீசாரால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானியும் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 #J&KULBpolls #Mirwaizunderhousearrest  #ஜம்மு காஷ்மீர் #காஷ்மீர் #உள்ளாட்சி #தேர்தல் #பரூக் #அப்துல்லா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.