தமிழ் மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: றொபேட் கில்ரன்

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ, அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமென, அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன் வலியுறுத்தியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட,கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க நாட்டின் இலங்கைக்கான பதில் தூதுவர் றொபேட் கில்ரன், வடமாகாண முதலமைச்சரை யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்துள்ளது. சந்திப்பின் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“அமெரிக்க அரசாங்கம் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பதில் தூதுவர் என்னிடம் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இருந்து அமெரிக்க வெளியேறியிருந்தாலும், தாம் கொண்டு வந்த இணக்கப்பாடுடைய பிரேரணையை முழுமையாக நடைமுறைப்படுத்த சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை யார் முன்னெடுக்கின்றார்களோ, அவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

அதனை நானும் ஏற்றுக்கொண்டதுடன், 2015 ஆம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்த காரணத்தினால் தான் வேறு சிந்தனையுடைய மக்களை முறியடிக்க முடிந்தது. மக்களிடையே ஒற்றுமை இருந்தால் மாத்திரமே தமிழ் மக்களுக்கான நன்மைகள் கிடைக்கும் சாத்தியம் ஏற்படும் எனவும்அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டுமென்பதுதே எனது விரும்பம் என்ற கருத்தினை அவரும் ஏற்றுக்கொண்டதுடன், தமது விருப்பமும் அதே தான் என்பதனை சுட்டிக்காட்டினார்.

பொறுப்புக்கூறல் விடயத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள், இலங்கை அரசாங்கம் உரிய பதிலைத் தருவார்கள் என பதில் தூதுவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், அதற்கான அழுத்தங்களை அமெரிக்க அரசாங்கம் கொடுக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆகையினால், மக்கள் இயக்கம் ஒன்றினை வலுப்படுத்தி மக்களுடன் இணைந்து செயற்படுவதே உத்தேசம் என வலியுறுத்தியுள்ளேன். அதனை பதில் தூதுவர் ஏற்றுக்கொண்டதுடன், மக்களின் பிரதிநிதித்துவம் சபையில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மக்களுடன் மக்களாக இருந்து, அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நன்மை கிடைக்குமென்றும், முதலமைச்சர் பதவி இழந்த பின்பும், சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென்றும் பதில் தூதுவர் றொபேட் கில்ரன் நம்பிக்கை வெளியிட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.