தோனியை நம்ப வேண்டாம்-மஞ்சரேக்கர்!

ரசிகர்கள் தோனி மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார். நீண்ட காலம் கேப்டனாக இருந்த தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிரு ஓய்வுபெற்றார். 2017ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்தும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பதவியை விட்டு விலகினாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் ஆடிவருகிறார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தோனி பேட்டிங்கில் சிறப்பாக ஆடவில்லை. இதனால் அவரது பேட்டிங் திறன் குறித்து பரவலாகப் பேசப்பட்டது. தற்போது முடிந்த ஆசியக் கோப்பை போட்டியிலும் தோனி பேட்டிங் ஜொலிக்கவில்லை. இதனால் தோனியின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில், தோனியின் பேட்டிங் சொதப்பல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து இஎஸ்பிஎன் க்ரிகின்ஃபோ-க்கு அளித்துள்ள பேட்டியில், “தோனி இப்போது மிகச் சிறந்த உலகத்தரமான பேட்ஸ்மேனாகத் தெரியவில்லை. கேதார் ஜாதவ் ஆசியக் கோப்பையில் நல்ல ஃபார்மில் இருந்தார். அவரை தோனிக்கு முன்னதாகக் களமிறக்கியிருக்கலாம். ஆனால் தோனியை கேதாருக்கு முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பி சொதப்பியுள்ளனர். தோனி இப்போதிருக்கும் நிலையில் அவர் பேட்டிங் வரிசையில் கீழே விளையாட வேண்டும். ரசிகர்கள் தோனி மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இனியும் தோனி சிறப்பாக பேட்டிங் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” எனப் பதிவு செய்துள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ ஒரு கீப்பராக தோனி தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணி கோலி தலைமையில் செல்ல இருக்கிறது. கோலிக்கு பக்கபலமாக அனுபவம் வாய்ந்த தோனி உடன் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், தோனியின் பேட்டிங் தொடர்ந்து கவலையளிக்கிறது. இது அணிக்குப் பின்னடைவாக அமைந்திடும். தோனிக்கு பதிலாக வேறொரு வீரர் சாய்ஸில் இருந்தால் அதனை பிசிசிஐ பரிசீலிக்க வேண்டும்” என சஞ்சய் மஞ்சரேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.