யாழ்.பல்கலைக்கழகத்தில் கற்றலுக்கான அடிப்படை வசதிகள் இல்லை!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தமக்கான அடிப்படை வச திகளை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இவ் விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் மாணவர்களுக்குரிய அடிப்படைய வசதிகள் எவையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இத்தகைய நிலைமைகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்குத் தெரியப்படுத்தியும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகின்ற போது

எமது பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்கான சூழலே இல்லாமல் இருக்கின்றது. அதாவது பாடசாலை வகுப்பறையையும் விடவும் மிக மோசமான நிலையிலையே இங்குள்ள விரிவுரை மண்டபங்கள் காணப்படுகின்றன.

மாணவர்களுக்கான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, விளையாட்டு வசதிகள், அரங்குகள் எவையுமே போதுமானதாக இல்லாத நிலைமை காணப்படுகின்றது. இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் இந்த நிலைமைகள் தொடர்வது

மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. இங்கு மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். ஆகையினால் இதற்குரிய நடவடிக்கைகளை

இனிமேலாவது மேற்கொள்ள வேண்டுமென்று மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது. ஆகவே மாணவர்களினது அடிப்படைத் தேவைகள் உட்பட மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகளைக் கருத்திற் கொண்டு

இவற்றைத் தீர்த்து வைப்பதற்கு நிர்வாகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதனைவிடுத்து இனியும் நிர்வாகம் அசண்டையினமாக இருக்காது மாணவர்களின் நலனில் அக்கறையெடுத்துச் செயற்பட வேண்டும்.

இங்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் பெரும் சிரமங்களையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்ற போதிலும் நிர்வாகம் இதுவரையில் ஆக்கபுர்வமான நடவடிக்கைகளை எடுக்காத அதே நேரத்தில்

மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களும் எமக்காக குரல் கொடுக்காமாலே இருக்கின்றனர். ஏனைய இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்காக அங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து அந்தப் பல்கலைக்கழகங்களுக்கு

மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் முதல் அனைத்தையும் பெற்றுக் கொடுக்கின்றனர். ஆனால் எமது பிரதிநிதிகள் அதனைச் செய்யத் தவறுகின்றனர். ஆகையினால் பல்கலைக்கழக நிர்வாக மாணவர்களின் பிரச்சனையில் அக்கறையெடுத்துச் செயற்படுகின்ற

அதே வேளையில் மக்கள் பிரதிநிதிகளும் பல்கலைக்கழகத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டக் கொண்டனர். மாணவர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் போராட்டங்களை நடாத்தியே தீர்வைப் பெறவேண்டியதொரு நிலைமையில் இருக்கின்றனர்.

அகவே அவ்வாறான நிலைமைகள் தொடராது உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களும் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் நாம் எமது பிரச்சனைகளுக்காக பொராட்டங்களையே நடாத்த வேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.