அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தீக்குளிப்பேன்: வயோதிபப் பெண்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படுமென வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.

பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொன்னாலை மக்கள் கலந்துகொண்டனர். இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட வே.தவமணி (வயது-70) என்ற வயோதிபப் பெண், கைதிகளை விடுதலை செய்யப்படாவிட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்க வேண்டிய நிலை ஏற்படுமென கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன், சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத் தலைவர் செ.றதீஸ்வரன், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.