அயோத்தியில் புத்தர் சிலை: எம்.பி. கோரிக்கை!

ராமர் கோயில் கட்டுவது குறித்து இந்துத்துவ அமைப்புகள் மற்றும் கட்சிகள் குரலெழுப்பி வரும் நிலையில், அயோத்தியில் புத்தர் சிலையை நிறுவ வேண்டுமென்று கூறியுள்ளார் பாஜக எம்.பி.யான சாவித்திரிபாய் பூலே.


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி - ராமர் கோயில் தொடர்பான பிரச்சினைக்குரிய நிலம் குறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அயோத்திக்கும் புத்தருக்குமான தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டார் பஹ்ரைச் தொகுதி பாஜக எம்.பி.யான சாவித்திரிபாய் பூலே. “உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அயோத்தியின் பிரச்சினைக்குரிய இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், புத்தர் சம்பந்தப்பட்ட சில பொருட்கள் கிடைத்தன. ஆதலால், அந்த இடத்தில் புத்தரின் சிலையையும் நிறுவ வேண்டும்” என்று தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (நவம்பர் 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இதைத் தெரிவித்தார். “பாரதம் புத்தரைச் சார்ந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதனால், அயோத்தி என்பது புத்தருக்கானது. இங்கு அவருடைய சிலையை நிறுவ வேண்டும்” என்று அவர் கூறினார்.

பாஜக மாநிலங்களவை பாஜக எம்.பி.யான ராகேஷ் சின்ஹா, ராமர் கோயில் பற்றிய தனிநபர் மசோதா கொண்டுவருவதாகக் கூறியுள்ளார். இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சாவித்திரிபாய் பூலே, அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று தெரிவித்தார். நாட்டில் எல்லா மதங்களுக்கும் சம அளவிலான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டுமெனவும், அரசியலமைப்பின்படியே இந்தியா இயங்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.