பாஜகவின் ஊதுகுழலாக எடப்பாடி-துரைமுருகன்!

பாலாறு பிரச்சினையில் சட்ட ரீதியாகவும் – பேச்சுவார்த்தை ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஊதுகுழலாக மாறி அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகியிருக்கிறார் என திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 10) செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு-திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அப்போது பேசிய அவர், ”பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுகவினர் ஏன் எதுவும் கேட்கவில்லை? பாலாறு பாலைவனம் ஆகி வருகின்றது. தடுப்பணைகளை இடித்து விட்டு தண்ணீரை கொடுங்கள் என ஏன் திமுகவினர் கேட்கவில்லை? அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவே நினைக்கிறார்கள்; மக்கள் நலனில் அக்கறை இல்லை” என்று விமர்சித்திருந்தார்.
முதல்வரின் கருத்துக்கு பதிலளித்து, இன்று (நவம்பர் 11) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த திமுக அரசுதான்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
”அன்று துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினும், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடியும் ஆந்திராவிற்கே நேரில் சென்று, அன்றைய ஆந்திர முதலமைச்சர் மறைந்த ஒ.எஸ். ராஜசேகர் ரெட்டியை சந்தித்து “தமிழகத்தின் நலனுக்கு எதிராகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தடுப்பணைகள் கட்டப்படாது” என்று உறுதி மொழியைப் பெற்று வந்தவர்கள் என்பதும் கூட முதலமைச்சருக்குப் புரியவில்லை. அது மட்டுமின்றி, “மத்திய நீர்வள ஆணையம் ஆய்வு செய்யும் வரை தடுப்பணை கட்டக்கூடாது” என்று ஆந்திர மாநில அரசுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு மூலம் அறிவுறுத்த வைத்ததும் தலைவர் கலைஞர்தான் என்பதைக்கூட அறியாமல், திமுக ஆட்சியில் இருந்த வரை பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட கட்ட விடாமல் தடுத்து வைத்திருந்ததைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒரு முதலமைச்சர் “மைக்” கிடைத்த நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுப்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
”அதிமுக ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது. தன்மீது உள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதே அக்கறையுடனும் வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடையுத்தரவு பெறவில்லை? இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம் மாறும் செயல் என்று கூற வேண்டும்.
முதலமைச்சரான பிறகு ஆந்திர முதலமைச்சருக்கு எத்தனைக் கடிதம் எழுதினார்? பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திர மோடியைப் பல முறை சந்தித்துள்ள முதலமைச்சர் பாலாற்று பிரச்சினை குறித்து எத்தனை முறை பேசினார்? “ என்று கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன், “ என் பணி என்றென்றும் ஊழல் செய்து கிடப்பதே” என்ற ஒரே நோக்கத்துடன் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் இந்தக் கேள்வியை எழுப்புவது - ஆட்சியிலிருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வி எழுப்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
”கோதாவரி நீரைக் கூட தமிழகத்திற்குக் கொடுப்போம் என்று ஸ்டாலினை சந்தித்துவிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்து விட்டுச் சென்றார். அப்படியென்றால் நாங்கள் பாலாறு பற்றியும் ஆந்திர முதலமைச்சரிடம் பேசினோம் என்றுதானே அர்த்தம். அதுகூடத் தெரியாமல் பாலாறு பிரச்சினையில் ஆட்சியிலிருக்கும் முதலமைச்சர் சட்ட ரீதியாகவும் - பேச்சுவார்த்தை ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, பாஜகவின் ஊதுகுழலாக மாறி அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தலைமைச் செயலக விவகாரத்தில் கூட விசாரணை ஆணையம் அமைத்து மாதக்கணக்கில் அல்ல - வருடக் கணக்கில் விசாரித்து ஒன்றுமே கண்டுபிடிக்க முடியாத நிலையில் அந்த ஆணையத்தை இழுத்துமூட உயர் நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. ஜெயலலிதா போட்ட விசாரணை ஆணையமே கலைக்கப்பட்டுள்ள நிலையில், எப்படி வழக்குப் போடுகிறீர்கள் என்றுதான் நானும், ஸ்டாலினும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் நியாயம் இருப்பதால் அதற்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீது திமுக கொடுத்த ஊழல் புகார்கள் ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடிப்படை ஆதாரம் உள்ள புகார்கள். ஆதாரம் இல்லாத ஊழல் புகார் என்று பீற்றிக் கொள்ளும் முதலமைச்சர் நேராக உச்ச நீதிமன்றம் சென்று “என் மீதான சிபிஐ விசாரணைக்குப் போட்ட தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுங்கள். நான் ஊழல் விசாரணையைச் சந்திக்கிறேன்” என்று கூறும் தெம்பும், திராணியும் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.