யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை: பாரதிராஜா!

பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ரஜினி, கமல், ஷங்கர் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் பலரும் பரியேறும் பெருமாள் படக்குழுவினரைப் பாராட்டினார்கள். தமிழகத்தில் பல திரையரங்குகளில் இப்போதும் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.


மக்கள் மனங்களை வென்ற பரியேறும் பெருமாள் திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில் மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கவுதமன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது, “ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அவற்றை விட ஒருபடி மேலிருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தை விமர்சிப்பதற்கு அவனைத் தாண்டி ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.

தலித் சினிமா, தலித் இலக்கியம் என்பதையெல்லாம் ஒத்துக்கவே மாட்டேன். மறுபடியும் மறுபடியும் தலித் தலித் என்று எதற்காகச் சொல்லவேண்டும். ஒரே இலக்கியம்தான். இலக்கியவாதிகள் கூட ரொம்ப நாளாக தலித் இலக்கியம் என்று சொல்கிறார்கள். இதனால், ரொம்ப நாளாக அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறேன். என் தாயின் கருவறைக்குள் புகும் விந்துக்கு ஏதாவது நிறம் இருக்கா. அதில் நிறம் இருந்தால் சாதி இருக்கு. கருவறைக்குள் போராட்டம் இருக்கும். ஆனால், நிறமும் சாதியும் அணுவுக்குக் கிடையாது. நாம் எல்லோரும் சமூகம், ஒரே சாதி.

மாரி செல்வராஜுக்குள் பெரிய கலைஞன் ஒளிந்திருக்கிறான். பிரச்சினையை மையமாகச் சொல்லியிருக்கிறான். தன் கருத்தைச் சொல்லும்போது ஒரு எழுத்தாளன் என்ற வலிமையோடு சொல்லியிருக்கிறான். இந்தப் படம் பார்த்து முடித்ததும் மறுபடியும் மறுபடியும் எனக்கு மாரி செல்வராஜுடைய முகம் தான் வந்து போனது. அவன் மனிதர்களை மட்டும் படத்தில் பேச வைக்கவில்லை, அந்த மண்ணையும் பேச வைத்திருக்கிறான்.

சண்டாளன் ஒருத்தன் பொறந்துட்டானடா என்று அங்கேயே நான் விழுந்துட்டேன். ஆனால், கதாநாயகனின் நிறம்தான் கொஞ்சம் இடிச்சிருச்சு. ரொம்ப அழகா நடித்திருப்பான். நிறம் மட்டும் கொஞ்சம் கறுப்பு தடவி இருக்கலாம். கருப்பி மீது அவன் எவ்வளவு நேசம் வைத்திருந்தானோ அதைவிட அந்தக் கருப்பி அவன்மீது நேசம் வைச்சிருந்துச்சு.

அதேபோல, இப்படத்தில் வருகிற ‘நான் யார்?’ படலைப் போல ஒன்றை இதுவரை பார்த்ததே இல்லை. இந்த ஒரு பாடல் போதும், மாரி செல்வராஜ் ஒரு அற்புதமான அறிவாளிக் கலைஞன் என்பதைச் சொல்வதற்கு. மேலும் குறிப்பாக யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள். இது போதாது, ஒரு மிகப்பெரிய விழா எடுத்து உலக மக்களுக்கெல்லாம் உன்னைப்பற்றிச் சொல்ல வேண்டும்” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும் போது, “மாரி செல்வராஜ் ஏற்கனவே ராமிடம் 11 வருடங்கள் இருந்திருந்தாலும், அவருடைய வரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தினை தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கடைக்கோடி வரை கொண்டு சேர்த்ததிலும் பா.இரஞ்சித்தின் பணி மிகப் பெரியது.

தலித் அரசியல் பேசும் திரைப்படங்களில் மாரி செல்வராஜ் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இது ஒரு மிகப்பெரியாக முன்நகர்வாக இருக்கும். கதையாகவும், கதாபாத்திரங்களாகவும், தொழில்நுட்பமாகவும் முழுமையான ஒரு சினிமாவாக இப்படம் அமைந்திருக்கிறது. எந்த நெருடலும் இல்லாமல் ஒரு வாழ்க்கையையும், காலத்தையும் கடந்து வருவதற்கு இப்படத்திற்கு இசை பலம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.