இந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்தவரின் தந்தை போயிங் நிறுவனம் மீது வழக்கு

இந்தோனேசியா நாட்டில் 189 உயிர்களை பறித்த லயன் ஏர் விமான விபத்தில் உயிரிழந்த வாலிபரின் தந்தை போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 189 பேருடன் கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டு சென்ற லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 20 நிமிடங்களில் சுமத்ரா தீவின் அருகே ஜாவா கடல் பகுதியில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் சென்ற அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் பலியானவர்களில் ஒருவர் ரியோ நன்டா பிராட்டாமா(26) விரைவில் மணக்கோலம் காண இருந்த ரியோ இறந்துபோன தகவல் அவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மணப்பெண் வெளியிட்ட சில புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பலரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த பயணத்தின்போது நான் திரும்பி வராவிட்டாலும் உனது திருமண உடையுடன் எடுக்க இருந்த 'போட்டோ ஷூட்'-டை தவற விட்டு விடாதே என தனது வருங்கால கணவர் ரியோ குறிப்பிட்டிருந்ததாக இன்ட்டா சியாரி(26) என்னும் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், போயிங் 737 ரகத்தை சேர்ந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பாதுகாப்பு தொடர்பான ஒரு முக்கிய தொழிநுட்ப பிரச்சனையை சரிசெய்ய போயிங் நிறுவனம் அக்கறை காட்டாததால் இந்த விபத்து நேர்ந்ததாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ரக விமானங்களின் என்ஜின்கள் மற்ற விமானங்களில் உள்ள என்ஜின்களைவிட எடை அதிகமாக உள்ளதால் வானத்தில் உயர கிளம்பி விமானத்தை நிலைநிறுத்தும்போது சமநிலை இல்லாத தடுமாற்றத்தால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேசியா விபத்தில் 189 உயிர்கள் பலியானதற்கு போயிங் நிறுவனத்தின் அஜாக்கிரதை தான் காரணம் என ரியோவின் தந்தை வழக்கு தொடர்ந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.