ஒன்றுபடு..!

ஒன்று படு தமிழா ஒன்றுபடு
இன்று நாளை என்று 
ஒதுங்காது 
உன்னை ஒடுக்கும்
கால்களை அடக்க
இன்றே புறப்படு!

கொண்ட கொள்கையை திரட்டி
அண்டமே அதிர அதிகாரங்கள்
ஒழிய
அடம்பன் கொடியாய்
அரசியல் புரட்சி செய்வோம்
உரிமைக்குரலில்
உயர்ந்து நிற்போம்!

மாண்டவர் கனவுகளில்
மானசீக காதல் கொண்டு
ஆள்பவர் அகன்று போக
தூய்மைக் கரம் கோர்த்து
வாய்மைக்காய் நீதியுரைத்து
தோள்களைத் தட்டி
தோல்வியை விரட்டி
அறிவு வாள் உருவி
அரசியல் பொய்மைகளை அறுத்து
நெறிபுரளா நேரியராய்
விதைகுழி வீரியரின்
சத்தியப் பாதையில்
நித்திய மேனியராய்
நிலை குலையாது
நெஞ்சு நிமிர்த்தி
நடப்போம்!

காலமூச்சின் சுழற்சி
எதிர்காலத்தின் மீட்சியாகும்
சுயலாப அரசியலில்
இமாலய இழப்புகளை சந்தித்தோம்
இதே அரசியல் பெயர்சியில்
ஈழத்தின் உயர்ச்சியும் ஏறும்
காலக்கண்ணாடியில்
தோற்றமும் மறைவும்
எப்படி நிதர்சனமோ
அப்படியே ஏற்றமும் இறக்கமும்
நிலந்தரமற்றது.

நீ இறங்கும் ஒவ்வொரு கணமும்
கீழே போகின்றாய் என்பதை
உணர்ந்து கொள்!
ஏற்றத்தில் நிலைகுலையாதவன்தான்
எவெரெஸ்ட் மலையின் உச்சியை தொடுகிறான்!

ஆகவே
அரசியல் ஆட்டத்தில்
அசராது விளையாடுவோம்
இனிவருவதெல்லாம்
எமக்கான வெற்றிகள்
என்பதில் அசைக்கமுடியாத
நம்பிக்கைகொள்வோம்!

இனி
விவேகமே விடுதலைக்கான வழி
துணிவும் ஆற்றலும் இதற்கான
படி
வளைவும் நெளிவும் எமக்கான
குழி
இதை உணர்ந்து தமிழ் இனத்திற்காய்
விழி

தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.