கோயில் சொத்து: குத்தகை விவரம் இணையத்தில் பதிவேற்றம்!.

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு, தமிழக அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். அது மட்டுமல்லாமல்,

கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குச் சொந்தமான 12.5 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்குமாறு, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் வாடகை நிர்ணயக் குழுக்கு உத்தரவிடக் கோரி ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ பரமாச்சாரிய சுவாமிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு மாதத்திற்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட வேண்டுமென அறநிலையத் துறை இணை ஆணையர் உத்தரவிட்டதாகவும், தியாகபாரி என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு 83 லட்சம் ரூபாய்க்கு கோயில் செயல் அலுவலர் குத்தகை தொகை நிர்ணயித்ததாகவும், அதற்கு அரசு அதிகாரிகள் உடந்தை எனவும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில், இன்று (அக்டோபர் 31) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகபாரி எந்த உரிமமும் இல்லாமல் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் அவரை ஆக்கிரமிப்பாளர் என்றே கருத வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதும், இந்த ஆக்கிரமிப்பில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. பல்வேறு இடங்களில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மூன்றாவது நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நில மாபியாக்கள், ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் நிலங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதை, இந்து அறநிலையத் துறை கண்டும் காணாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார் நீதிபதி சுப்பிரமணியம். தமிழகத்தில் அரசு நிலம், கோயில் நிலம், அறக்கட்டளை நிலம் ஆகியவற்றை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருவதாகக் கூறிய நீதிபதி, இதைத் தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தார்.
கோயில் நலனுக்காகவும் பக்தர்களின் நலனுக்காகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நல்ல உள்ளங்கள் சிலர் தானமாக வழங்குகின்றனர் என்றும், அந்த உன்னத நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட கோயில் அறங்காவலர்களே அச்சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
“இந்த சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கடமை தவறிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர் கடமை தவறியுள்ளனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, தன் கீழ் பணியாற்றக்கூடிய அதிகாரிகளைக் கண்காணித்து, பணிகளை ஆய்வு செய்ய வேண்டிய கடமை உள்ளது. இனிமேலாவது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் உடனடி நடவடிக்கைகளில் இறங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்” என நீதிபதி குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களின் சொத்துகள், நகைகள் உள்ளிட்டவற்றைக் கணக்கெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார். “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், அறக்கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துக்களின் குத்தகை விவரங்களையும், குத்தகை பாக்கிதாரர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து, மூன்று மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளுக்குத் துணை போகும் அதிகாரிகளுக்கு எதிராகத் துறை ரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவற்றை அமல்படுத்தி, 2019ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.