கூட்டமைப்பு சர்வதேச அணுகுமுறையால் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் –ஈ.பி.ஆர்.எல்.எப்.!

இலங்கை அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் சர்வதேசத்தத்தின் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழ் கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இவ்வறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தேசிய அரசாங்கத்திற்குள் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இன்றி திடீரென ஏற்படுத்தப்பட்ட இந்த அரசியல் மாற்றமானது நாட்டின் ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன், சட்டப்பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது. 19ஆவது அரசியல் யாப்புத் திருத்தமானது ஆங்கில மொழிமூலம் சரியானதா? சிங்கள மொழிமூலம் சரியானதா என்ற அரசியல் சட்டசர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இது இதுவரை பேசப்பட்டுவந்த புதிய அரசியல் சாசனத்தில் சிங்கள மொழியா? தமிழ் மொழியா இறுதியானது என்று ஏற்கனவே எழுந்திருந்த சிக்கலை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கக்கூடிய இத்தகைய நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகள் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வருகின்றன.

இதனிடையே தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 5 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளதுடன், இன்னும் பலபேருடன் பேரப் பேச்சுக்கள் நடைபெறுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறும் என்பது யதார்த்தமானது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே இருந்த அரசாங்கம் புதிய அரசியல் சாசன விடயங்களை இழுத்தடித்து வந்ததுடன், ஜெனிவா தீர்மானங்களையும் முழுமையாக நிறைவேற்றாமல் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் நடவடிக்கைகள் எடுக்காமலும் இருந்து வந்துள்ளது.

அதுமாத்திரமல்லாமல், பொறுப்புக்கூறல் தொடர்பாக ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்க மாட்டோம் என்று கூறிவந்ததுடன், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு, வடக்கு கிழக்கிலிருந்து மேலதிக இராணுவத்தை வெளியேற்றல் போன்ற பல விடயங்களிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் முன்னேற்றங்கள் இல்லை என்பதே வெளிப்படையானது.

இந்நிலையில்,தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்ற அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவரென்ற அடிப்படையிலும் கொழும்பிலுள்ள சர்வதேச இராஜதந்திரிகளை ஒன்றாகச் சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் மத்தியஸ்தம் வகித்தோ அனுசரணை வழங்கியோ ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #Siva sathiyanathan #jaffna #Vauniya #TNA #EPRLF

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.