யாழில் இடம்பெற்ற மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும், அஞ்சலி நிகழ்வும்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர் அஞ்சலி நிகழ்வும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை(25-11-2018) பிற்பகல் -02.30 மணி முதல் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் அமைந்துள்ள வை.எம்.சி மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த கால உள்நாட்டுப் போரில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.  

இந்நிகழ்வின் போது கனடியத் தமிழர் தேசிய பேரவையின் மண்வாசனை அமைப்பின் நிதிப் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 50 வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாவீரர் குடும்பங்களுக்குப் பெறுமதியான உலருணவுப் பொருட்களும், தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் நினைவுரைகளாற்றினர்.  

குறித்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியைச் சேர்ந்த கனகசபை விஷ்ணுகாந், கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.