மைத்திரி சுயநினைவில் உள்ளாரா?

நாட்டு மக்கள் முன் ஜனாதிபதி ஜோக்கராக மாறிவிட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.


தோப்பூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பின் கதவால் மகிந்தவை பிரதமராக நியமித்த பின் ஜனாதிபதி பேசும் பேச்சுக்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே காணப்படுகிறன. இதனால் இப்போது அவர் பேசும் பேச்சுக்களை கேட்கும் மக்கள் அவரை ஒரு ஜோக்கராக பார்க்கும் சூழ்நிலையே தோன்றியுள்ளது.

சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தை கலைப்பதாக வர்த்தமானி வெளியிட்ட பின் அது தொடர்பாக மக்களை தெளிவுபடுத்த அவர் ஆற்றிய உரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்துவிட்டதாகவும் அதனாலேயே தான் நாடாளுமன்றத்தை கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

பெரும்பான்மை இல்லாத மகிந்தவை பிரதமராக்கி அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உதவியாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது ஜனாதிபதிதான். இதன் காரணமாகவே நான் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு விலை பேசப்பட்டோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரிக்க காரணமாக இருந்ததே அவர் தான் என்பதை மறந்துவிட்டாரா? இவ்வாறு இன்று இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது இவர் சுயநினைவில்தான் உள்ளாரா என சந்தேகம் வருகிறது.

நாங்கள் ஏற்கனவே 113 ஐ உறுதி செய்தபின்தான் மகிந்தவை பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். நாடாளுமன்றம் கூடி இரண்டு வாரங்களுக்கு மேலாகின்றன. எங்கே அவர் கூறிய 113? வாக்கடுப்பு என்றதும் மிளகாய் தூள் வீசுகிறார்கள்.

இல்லை எனில் நாடாளுமன்றத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். ஜனாதிபதி அவர்களே உங்களால் 113 ஐதான் காட்ட முடியவில்லை. முடிந்தால் அடுத்தவாரம் கூடும் நாடாளுமன்றத்தில் 85 ஐயாவது காட்டுங்கள் என நாம் சவால் விடுகிறோம்.

இப்போது புதிதாக ரணில் விக்கிரமசிங்கவுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் புத்தகத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். தயவு செய்து உடனடியாக அந்த புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.

தேவை ஏற்படின் எமது கட்சி சார்பாக அந்த புத்தகத்துக்கு அனுசரணை வழங்கவும் நாம் தயாராக உள்ளோம்.

அவ்வாறு அந்த புத்தகம் வெளியிட்டால் யார் திருடர்களை பாதுகாத்தது? இனவாதிகளை பாதுகாத்து இனவாதத்தை தூண்டியது யார்? வெளிநாட்டு முதலீடுகளை தடை செய்து பொருளாதார அபிவிருத்திகளுக்கு யார் தடையாக இருந்தது? வேலைவாய்ப்புக்கள், அரசியல் பழிவாங்கல்களை வழங்க யார் தடையாக இருந்தது? என்பதை எம்மால் நாட்டு மக்களுக்கு ஆதாரபூர்வமாக தெரிவிக்க முடியும்.

ஆகவே ஜனாதிபதி செய்த இந்த சட்டவிரோதமான செயலால் ஐக்கிய தேசிய முன்னனி பலம் பெற்றுவிட்டது. இதனால் விரைவில் ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவையை உருவாக்கும் காலம் மலர்ந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.