களரி நடிகையின் புதிய களம்!

‘களரி’யில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தற்போது தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார்.

கிரன் சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்த படம் களரி. அவருக்கு ஜோடியாக பசங்க-2, சைவம் போன்ற படங்களில் நடித்த வித்யா பிரதீப் நடித்திருந்தார். தீவண்டி, பாப் கார்ன் போன்ற மலையாளப் படங்களில் நடித்து கவனம்பெற்று கோலிவுட்டுக்கு வந்த சம்யுக்தா மேனனும் களரியில் இணைந்தாலும் அவர் கதாநாயகியாக நடிக்காமல் கதாநாயகனுக்கு சகோதரியாகவே அந்த திரைப்படத்தினில் நடித்தார்.
களரி பெரிய அளவுக்கு எந்த கவனத்தையும் பெறாததால் சம்யுக்தாவும் பெரிய அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. ஆனாலும் தமிழில்தான் இந்த நிலை. மலையாளத்தில் அவரது கிராஃப் ஏறுமுகமாகவேதான் உள்ளது. குறிப்பாக துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு யமந்தன் பிரேம கதா எனும் படத்தில் நடிக்கும் அவர் , தற்போது நடிகர் ஆசிஃப் அலி நடிக்கும் அண்டர்வேர்ல்டு எனும் படத்திலும் இணைந்துள்ளார்.
இந்த அண்டர்வேர்ல்டு படம் மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக மாறியுள்ளது. காரணம், ஈ அடுத்த காலத்து, லெஃப்ட் ரைட் லெஃப்ட் போன்ற படங்களை இயக்கியதுடன் தனது நேர்த்தியான எடிட்டிங்கிற்காக அதிகம் பேசப்படும் அருண் குமார் அரவிந்த் இதை இயக்குவதால்தான். இந்தப் படத்தில் ஃபர்ஹான் ஃபாசிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மேல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி14 என்டெர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.
துல்கர் சல்மானுடன் நடிக்கும் படமும் இந்த அண்டர்வேர்ல்டு படமும் வெற்றிபெறும் பட்சத்தில் அதைக் கணக்கில்கொண்டு சம்யுக்தா மேனனை மீண்டும் கோலிவுட்டுக்கு இழுத்துவந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.