உரிமை அரசியலுக்காக அபிவிருத்தியை இழக்க முடியாது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் மத்தியஸ்தம் வகிக்கும் என்றால் தானும் மத்தியஸ்தம் வகிப்பதாக அண்மையில் பிரதியமைச்சராக நியமனம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கூறினார்.


இன்று பகல் கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் வியாழேந்திரன் இதனைக் கூறினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்தால், தானும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்பதாகவும், அவர்கள் மத்தியஸ்தம் வகித்தால் தானும் மத்தியஸ்தம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வளவு காலமும் உரிமை அரசியலில் ஈடுபட்டு வந்தபோதும் இதுவரை எதனையும் சாதிக்கவில்லை. தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பலனும் கிடைக்கவில்லை. ஆகவே உரிமைய அரசியலுடன் அபிவிருத்தியும் கலந்த அரசியல் வேண்டும் என்பதற்காகவே புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக கூறினார்.

உரிமைய அரசியலை பேசிப் பேசி இவ்வளவு காலமும் நிறையவற்றை இழந்திருப்பதாகவும், ஆகவே தொடர்ந்தும் இழக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தை விட கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருப்பதாகவும், கடந்த அரசாங்கத்தில் கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு எதுவித அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில்தான் அரசாங்கத்தில் இணைந்திருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஜனாதிபதியோ வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று கூறியிருப்பது தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, அதற்காக அபிவிருத்தியைும் நாம் இழக்க முடியாது என்று கூறினார்.

அத்துடன், அரசியல் கைதிகளின் விடுவிப்பு, காணி விடுவிப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே தற்போதைய அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் பிரதியமைச்சர் வியாழேந்திரன் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.