தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றய தினம் முக்கிய தீர்மானம்!

அரசியலமைப்பு ஜனநாயக மீறலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்கின்ற கருத்தை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அதே கருத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றது என்று முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எனவே ஒத்த கருத்தோடு நாங்கள் செயற்படுகின்றோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எந்தவித எண்ணப்பாடும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

12.11.2018 இல்  நாடாளுமன்றம் கலைப்பு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்திருக்கின்றது. முழு நாடே இதனை எதிர்கொள்கின்றது. இது தொடர்பாக பல்வேறு திசைகளில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கூட்டமைப்பைப் பொறுத்தவரையிலே அரசியலமைப்பின் 19வது திருத்தம் மீறப்பட்டிருக்கின்றது என்பதே எங்களுடைய நிலைப்பாடாகும்.

இந்த அடிப்படையிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் எங்களுடைய செயற்பாடுகள் ஏனைய கட்சிகளும் அதனைக் கையாளுகின்றன என்ற வகையிலே அவர்களுக்குச் சமாந்தரமாகச் சென்று கொண்டிருக்கின்றது.

நான் அறிந்த வகையில் நாளைய தினம் பல வழக்குகள் நாடாளுமன்றம் ஒத்திப் போடப்பட்டமைக்கு எதிராக 19ஆம் திருத்தம் சரியான முறையில் கையாளப்படவில்லை என்ற அடிப்படையில் அதனை மீறுகின்ற விதமாக நாடாளுமன்றக் கலைப்பு இடம்பெற்றிருப்பதாகவும் கூறி நீதிமன்றத்திடம் இதனை வெளிப்படுத்துமாறும்,

நாடாளுமன்றத்தைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருகின்ற தீர்ப்பு ஒன்றை வழங்குமாறும் பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிகின்றோம்.

அத்துடன் கட்சிகள் மற்றுமல்லாது சிவில் சமூகங்கள், பொதுமக்களும் தங்களது அடிப்படைய உரிமை மீறப்பட்டுள்ளதாக இவ்வாறு வழக்கைத் தாக்கல் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கின்றது.

இது ஒரு மிக அவசரமான வழக்கு என்பதால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்படுகின்ற நாளைய தினத்திலேயே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையைச் சட்டத்தரணிகள் முன்வைக்கவும் உள்ளனர்.

இதனுடைய அவசியம் கருதி பிரதம நீதியரசர் இதனைக் கருத்தில் எடுத்துக் கொள்வார் என்று நம்புகின்றோம். அத்துடன் ஜனாதிபதி ஏற்கனவே 14ம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துமாறும் ஒரு வேண்டுகோள் இருக்கின்றது என்றும் அறிய முடிகின்றது.

அவ்வாறான விடயங்களைச் செயற்படுத்தக் கூடிய தீர்ப்பு வழங்க வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக அந்தத் தீர்ப்பு 14ம் திகதிக்கு முன்பு சொல்லப்பட வேண்டும்.

விசேடமாகச் சொல்லப் போனால் இது கேட்கப்படுகின்ற அன்றைய தினமே முழு நாளும் அமர்வு இடம்பெறும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதாகத் தெரிவிக்கின்ற கருத்துக்கள் ஒரு இட்டுக் கட்டுகின்ற செய்திகளாகவே இருக்கின்றது.

இவ்வாறு யாரால் பார்க்கப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். சமநோக்குடையவர்கள், பொதுவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காழ்ப்புணர்வு இல்லாதவர்கள், ஒரு நேர்முகமாக விமர்சனம் செய்பவர்கள் இவ்வாறு சொல்வார்கள் என்றால் அது பற்றி நாங்கள் யோசிக்கலாம்.

ஆனால் இவ்வாறு சொல்பவர்கள் வேண்டுமென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு களங்கம் கற்பிக்க முற்படுகின்றார்கள்.

இதேவேளை, ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற போது இரண்டு பக்கங்கள் இருக்கும். இது பலருடைய கூட்டாக இருக்கும். மஹிந்த மைத்திரி அணி, ரணில் அணி என்று உதாரணத்திற்கு எடுத்தால் இதில் இந்த இரண்டு அணியினர் மட்டுமல்ல இவர்களோடு ஒத்து சிந்திக்கக் கூடியவர்கள் அனைவரும் இதில் சம்மந்தப்படுகின்றார்கள் என்றும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Batticaloa

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.