மண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிப்பு


மட்டக்களப்பு-மண்முனைப்பற்று பிரதேச
சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமானது.


 சபை ஆரம்பம் முதல் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், வரவுசெலவு திட்டம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. காரசாரமான பல்வேறு கருத்து மோதல்களைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பு தவிசாளரினால் கோரப்பட்டது.


 இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்தனர். அதற்கமைய 17 உறுப்பினர்களைக்கொண்ட மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் செலுத்தப்பட்டது.



அத்தோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் நடுநிலை வகித்த நிலையில், வரவுசெலவுத்திட்டம் நான்கு மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது. குறித்த வரவுசெலவுத்திட்டம் மீளமைக்கப்பட்டு கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டதுடன் சபை அமர்வுகள் மீண்டும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.