நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை: கோரிக்கை நிராகரிப்பு!

ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த
வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
ரஃபேல் ஊழல் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ”மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்துள்ளது . அதனடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
எனவே ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் ஜேபிசி விசாரணைக் கோரி காங்கிரசார் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் (டிசம்பர் 19) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. எனவே ஜேபிசி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு ரஃபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்கத் தயாராக உள்ளது என்று தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தார். அப்போது காங்கிரஸார் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
போராட்டமும் கைதும்
இதற்கிடையில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி பாஜக தலைவர், மனோஜ் திவாரி தலைமையில், காங்கிரஸ் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட பாஜகவினர் ராகுலுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.