சபரிமலை: சென்னையிலிருந்து சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்!

பம்பையிலிருந்து சபரிமலை நோக்கிச் சென்ற 11 பெண்களும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பம்பை காவல் நிலையத்துக்கே திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதன்பின்னர், மூன்று முறை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோதும் கூட இதுவரை ஒரு பெண் கூட ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்னையிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்காக மனிதி அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் கிளம்பிச் சென்றனர். பம்பைக்கு இன்று (டிசம்பர் 23) அதிகாலை வந்த அவர்களுக்கு பம்பை விநாயகர் கோவிலில் இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், 6 பேர் தாங்களே இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையை நோக்கிச் சென்றனர். ஆனால், இவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 7பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறை பாதுகாப்புடன் 11பெண்களும் பம்பையிலிருந்து சபரிமலையை நோக்கி முன்னேறினர். ஆனாலும், அவர்கள் சபரிமலைக்கு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் பெண்கள் மீதும், காவல் துறையினர் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதனைப் பொருட்படுத்தாமல், 11பேரும் வேகமாக முன்னேறினர். ஆனாலும் மலை ஏறிக் கொண்டிருக்கும்போது பெண்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவிய நிலையில், 11 பெண்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்திய காவல் துறை, அவர்களை பம்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பதட்டம் காரணமாக அப்பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.