வீடு இல்லாதவர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் வீடு இல்லாமல், சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள் எத்தனை பேர்
என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும் வீடுகள் இல்லாத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்குத் தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (டிசம்பர் 24) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விற்பனை வரி, சேவை வரி என வரிகளை வசூலிக்கும் அரசு, வீடில்லா ஏழை மக்களுக்கு மார்ச் மாதம் வரை தற்காலிகமாகத் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், பனியின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களுக்குக் கம்பளிப் போர்வைகள் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இது போன்று வீடில்லாமல் உள்ள மக்களின் விவரங்கள் குறித்த அறிக்கையை ஜனவரி 4ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.