அஜித்தை முந்திய ரஜினி

ரஜினி-அஜித் என்ற போட்டி தமிழ் சினிமாவில் வரும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். போட்டிகளைத் தவிர்த்துவிட்டு,
தயாரிப்பாளருக்கு லாபமான படத்தைக் கொடுக்கவேண்டுமென நினைத்து எப்போதோ தன் ரூட்டை மாற்றியவர் அஜித். ஆனால், ரஜினியின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் எனத் தெரிவித்தபோது எல்லாம் மாறிவிட்டது.
படப்பிடிப்பைத் தொடங்கியபோதே 2019 பொங்கல் தேதியை டார்கெட் செய்துவிட்டது சத்யஜோதி ஃபிலிம்ஸ். ஆனால், சன் பிக்சர்ஸ் குழுமம் அடாவடியாக பொங்கல் ரிலீஸாக பேட்டையை அறிவித்தது. போட்டியிட்டு இரு பக்கமும் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க அஜித் திரைப்படம் பின்வாங்கும் என்றே சினிமா வியாபார உலகம் கணித்தது. ஆனால், உறுதியாக பொங்கல் ரிலீஸ் என அறிவித்தது விஸ்வாசம் டீம்.
டிசம்பர் 24ஆம் தேதியே ரிலீஸாகியிருக்கவேண்டிய விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர், வெளிவராமல் போனதற்குக் காரணம் தமிழ் சினிமாவில் நடைபெற்று வரும் அதிகாரப் போர். கடந்தமுறை திடுமென பட ரிலீஸை தள்ளி வைத்ததால் இம்முறை என்ன நடக்கிறதெனப் பார்ப்பதற்காக சத்யஜோதி ஃபிலிம்ஸ் தாமதித்த இடைவெளியின் சென்சார் ரிசல்ட்டை வெளியிட்டு, டிரெய்லர் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டது சன் பிக்சர்ஸ்.
அஜித்தைவிட பெரிய மார்க்கெட் ரஜினிக்கு இருப்பது உண்மை என்றாலும், சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில் அஜித் ரசிகர்கள் தான் டாப். பொழுதுபோகவில்லை என்று அஜித் பெயரில் டிரெண்டிங் செய்யும் அவர்களுக்கு டீசர்/டிரெய்லர் வருவது ஒரு வரம் போல. எனவே தான் பேட்ட தாமதித்தது. ஆனால், சென்சார் வரை பெற்றுவிட்டதாலும், சொன்னபடி 24ஆம் தேதியை விஸ்வாசம் தவறவிட்டதாலும் தைரியமாக செல்லலாம் என பேட்ட டிரெய்லர் தேதியை அறிவித்துவிட்டனர். டிசம்பர் 24ஆம் தேதியைத் தவறவிட்ட விஸ்வாசம் டீமுக்கு அடுத்ததாகக் கிடைத்திருக்கும் தேதி ஜனவரி 1. ஆரம்பத்திலிருந்தே ஜனவரி 1 என்ற தேதியை, ஒரு வாய்ப்பாக வைத்திருந்ததால் தங்களது வேலைகளை 1ஆம் தேதியை நோக்கி திருப்பிவிட்டுவிட்டனர். மூன்று நாளில் ரிலீஸாகிறது; இரண்டு நாளில் ரிலீஸாகிறது; ஒரு நாள் காத்திருங்கள் என தொடர்ந்து ரிலீஸ் செய்வதற்கு போஸ்டர்களை விஸ்வாசம் டீம் தயார் செய்துவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.