போலீசில் புகார் அளித்த பெண்ணுக்கு தீ வைத்த இளைஞன் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூர் மாவட்டத்தில் பாலியல் துண்புறுத்தல் தொடர்பாக புகார் அளித்த பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரப்பிரதேச மாநிலம் சித்தாப்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் துண்புறுத்தல் தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நேற்று அந்த பெண் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குற்றம்சாட்ட இளைஞனும், அவனது சகோதரனும் வந்தனர். அவர்கள் திடீரென அந்த பெண்ணை தாக்கி, அவர் மீது கையில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



இதுகுறித்து சித்தாப்பூர் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மாதுவன் சிங் கூறுகையில், " பாதிக்கப்பட்ட பெண் சித்தாப்பூர் அருகே உள்ள தாம்பூர் பகுதியில் அவரது தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று அந்த பெண் சாலையில் சென்ற போது, குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞனும், அவனது அண்ணனும் அந்த பெண்ணின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இரண்டு பேரில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே உறவு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இந்திய குற்றவியல் தண்டனை 354, 326, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரி ஓம் பிரகாஷ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.