உல்லாசமாக வாழ்ந்த காதலன்

திருநெல்வேலி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனது கபட நாடகத்தினால் மயக்கி காதலிக்கச் செய்து பிறகு அவரை உணர்வுபூர்வமாக மிரட்டி மிரட்டி நகைகள், பணம் என்று பறித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


பிலிப் என்ற 18 வயது இளைஞர் ஏற்கனவே சிறைக்கு சென்றவர். இந்நிலையில் விடுதலையாகி வெளியே வந்த பிலிப் திருந்தி வாழாமல் மீண்டும் நண்பர்களுடன் உல்லாசமாக ஊர்சுற்றி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான், பதினொன்றாம் வகுப்பு மாணவியைப் பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து, ஆசை வார்த்தை பேசி, உண்மையான காதலனாக கபடநாடகம் ஆடி அந்தப் பெண்ணைத் தன் காதல் வலையில் சிக்கவைத்துள்ளார்.

இருவரும் ஊரைச்சுற்றி வந்தனர், இந்நிலையில் பணத்துக்கு எந்த வழியும் இல்லாத பிலிப் காதலியைப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.

காதலியிடம் அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது, இல்லையென்றால் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று இரக்கம் ஏற்படுமாறு நடித்துள்ளார்.

இவ்வாறு தற்கொலை மிரட்டல் விடுத்து அந்த மாணவியிடமிருந்து நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்து தன் நண்பர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இப்படியே 6 மாதகாலம் மாணவியை மிரட்டி மிரட்டி பணம், நகைகளைப் பறித்துள்ளார்,

ஒருநாள் வீட்டில் 28 பவுன் நகைகள் என்னவானது என்று மாணவியின் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது, மேலும் ரொக்கமும் காணவில்லை, இதனையடுத்து மகள் மீது சந்தேகம் ஏற்பட அவரிடம் உண்மையைக் கூறிவிடுமாறு வலியுறுத்த மாணவி கூறக்கூற பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இதனையடுத்து நகை, பணத்தை மீட்டுத்தருமாறு நெல்லை டவுன் பொலிசில் அவர்கள் புகார் அளிக்க, விசாரணையில் மாணவியிடம் கபடநாடகம் ஆடி பணம் பறித்தது தெரியவந்தது, இதனையடுத்து பிலிப்பைக் கைது செய்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.